சாப்ட்வேர் என்ஜினியர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை: வீட்டில் இருந்த ஸ்கூட்டியில் எஸ்கேப்
சென்னை: சென்னையை அடுத்த சேலையூர் அருகே கம்ப்யூட்டர் என்ஜினியரின் வீட்டின் கதை உடைத்த மர்ம் நபர்கள் அங்கிருந்த 100 சவரன் நகையை கொள்ளையடித்துவிட்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.
சென்னையை அடுத்த சேலையூர் அருகே உள்ள செம்பாக்கம் திருமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் அப்துல் முத்தலிப் (35). பெருங்குடியில் உள்ள ஒரு நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினியராக உள்ளார். அவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். நேற்று முன்தினம் அவர் குடும்பத்தோடு கிளம்பி பெருங்குடியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில் நேற்று மாலை அவரது வீட்டுக் கதவு உடைத்திருந்ததைப் பார்த்தவர்கள் உடனே இது குறித்து அவருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்தவுடன் அவர் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தபோது கதவுகள் உடைக்கப்பட்டு பீரோ லாக்கரில் இருந்த வைர மோதிரம் உள்பட 100 பவுன் தங்க நகைகள் திருடுபோயிருந்தன. மேலும் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டியையும் காணவில்லை. கொள்ளையர்கள் நகைகளைத் திருடிக் கொண்டு ஸ்கூட்டியில் தப்பிச் சென்றுள்ளது தெரிய வந்தது.
இது குறித்து சேலையூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே போலீஸ் உயர் அதிகாரிகள் கைரேகை நிபுணர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் சிறிது தூரம் ஓடிவிட்டு நின்றுவிட்டது.
இந்த சம்பவம் நடந்த பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ளன. அப்படி இருக்கையில் யாருக்கும் தெரியாமல் கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.