3 வயது மகளை சீரழித்த பிரான்ஸ் தூதரக உயர் அதிகாரி கைது
பெங்களூர்: 3 வயது மகளை சீரழித்த பிரான்ஸ் தூதரக உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியரை பெங்களூர் போலீசார் இன்று காலை கைது செய்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பேலஸ் கிரவுண்ட்ஸில் உள்ள பிரான்ஸ் தூதரகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி பாஸ்கல் மசூரியர்(39). அவரது மனைவி சுஜா ஜோன்ஸ். அவர் ஒரு இந்தியர். அவர்களுக்கு 7 வயது மகன், 20 மாத ஆண் குழந்தை மற்றும் 3 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் தனது கணவர் தங்கள் மகளை கற்பழித்ததாக சுஜா ஜோன்ஸ் பெங்களூர் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து பிரான்ஸ் தூதரக அதிகாரி மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே சட்ட நடவடிக்கைகள் முடியும் வரை பாஸ்கலை நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கக் கூடாது என்றும், பிரான்ஸ் குடியுரிமையுள்ள தனது குழந்தைகளை அவருடன் அனுப்பக் கூடாது என்றும் சுஜா உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்று காலை 6.30 மணிக்கு பாஸ்கல் கைது செய்யப்பட்டார். அவருக்கு இன்று மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவிருக்கிறார்.