நரேந்திர மோடி எதிர்ப்பாளர்களுடன் டெல்லியில் லாபி செய்யும் கேசுபாய் படேல்
டெல்லி: மதசார்புடையவரான நரேந்திர மோடியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக்கக் கூடாது என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கூறியதால் உருவான புயல் ஓய்ந்தபாடில்லை. இதற்குள் நரேந்திர மோடியின் பரம வைரியான முன்னாள் குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் டெல்லியில் மோடி எதிர்ப்பாளர்களுடன் பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டு முகாமிட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தில் 2 முறை முதல்வராக இருந்தவர் கேசுபாய் படேல். 2001-ம் ஆண்டு இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த நிலையில் திடீரென கேசுபாய் நீக்கப்பட்டு மோடி முதல்வராக்கப்பட்டார். அதன் பின்னர் கேசுபாய் பட்டேலுக்கு இறங்குமுகம்தான். மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாக குஜராத் அரசியலை கதிகலக்கி வருகிறார்.
முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பொதுக்கூட்டங்கள், பேரணியை நடத்துவதில் மனிதர் ரொம்பவே பிசியாகிவிட்டார். அத்துடன் மோடியின் எதிர்ப்பாளர்களை ஒருங்கிணைத்து வலுவான கோஷ்டியை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தி வந்தார்.
இந்நிலையில் மோடிக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து நேற்று தமது காந்திநகர் இல்லத்தில் கேசுபாய் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து இன்று கேசுபாய் படேலும் அவரது ஆதரவு கொஷ்டியும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
நரேந்திர மோடிக்கும் நிதின் கத்காரிக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால் இதனை பயன்படுத்தி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமது அணியை வலுப்படுத்திக் கொள்ள கேசுபாய் திட்டம் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார். பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரை இன்று சந்திக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இச்சந்திப்புகளின் போது தங்களது எதிர்காலத் திட்டம் என்ன என்பதையும் பகிரங்கமாகவே பாஜக தலைவர்களிடம் தெரிவிக்க முடிவு செய்துள்ளனர்.
டெல்லியில் நிருபர்களிடம் பேசிய கேசுபாய், குஜராத்தில் முதல்வர் நரேந்திர மோடியை எதிர்த்து பிரசாரத்தை துவக்கியுள்ளோம். நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் மோடியை வீழ்த்துவதே எனது லட்சியம் என்றார்.
ஏற்கெனவே கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி, கர்நாடக கட்சியில் கலகம் என்ற நிலையில் குஜராத் பஞ்சாயத்து என்று பாஜக தொடர்ந்து சிக்கலில் தவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications