பிறந்த குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு தாய் ஓட்டம்
நெல்லை: நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தையை விட்டு விட்டு அதன் தாய் தலைமறைவாகிவிட்டார்.
நெல்லை அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டில் கடந்த 8ம் தேதி நிறைமாத கர்ப்பிணி ஒருவர் மூதாட்டியுடன் வந்து பிரவசத்திற்காக சேர்ந்தார். கர்ப்பிணி பெண் தனது பெயர் அமுதா என்றும், தந்தை பெயர் மாரிசெல்வம் என்றும், தான் அம்பாசமுத்திரம் பொத்தை எம்ஜிஆர் நகரில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணுக்கு நேற்று முன்தினம் அழகான பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பலகீனமாக இருந்ததால் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்தனர். இதனிடையே மகளிர் வார்டில் தனியாக இருந்த அமுதா நேற்று திடீரென தலைமறைவாகி விட்டார். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்காக அதன் தாயை நர்சுகள் தேடியபோது தான் அவர் ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. பணியில் இருந்த டாக்டர்கள் இது குறித்து மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் வேல்கனி இது குறித்து அம்பை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
பெற்ற குழந்தையை போட்டு விட்டு ஓடிய தாயை போலீசார் தேடி வருகின்றனர். அனாதையாக தவிக்கும் பச்சிளம் குழந்தை தாய்ப்பால் இல்லாமல் சோர்வடைந்துள்ளது. டாக்டர்கள் மற்றும் நர்சுகள் குழந்தையை பராமரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications