ஜனாதிபதி தேர்தல் புறக்கணிப்பு முடிவை விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய கோரும் காங்.
சென்னை: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற முடிவை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கர்நாடகம் காவிரி ஆற்றில் தண்ணீர் விட மறுக்கிறது, பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயலுகிறது, நெய்யாற்றில் கேரள அரசு தண்ணீர் விட மறுத்து வருகிறது. . அதை தடுப்பார் யாரும் இல்லை.
இலங்கையில் உள்ள தமிழர்களின் இனப் படுகொலைக்கும் இந்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. தமிழநாட்டு மக்களின் தமிழர்களின் வாழ்வு சூறையாடப்படுவதைப் பற்றி யாரும் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை.
இந்தப் பிரச்சனைகள் தீர்க்க எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழ்நிலையில், யார் ஜனாதிபதியாக வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன? தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? என்று எண்ணுகிறபோது நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கலந்து கொள்ளாமல் இருப்பதே தமிழ்நாட்டிற்கு செய்கிற நன்மையாகும் என்று கூறியுள்ள விஜய்காந்த் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
இதை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ் கோரியுள்ளது. இது தொடர்பாக ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி தேர்தலை தே.மு.தி.க. புறக்கணிக்க முடிவெடுத்திருப்பதாக விஜயகாந்த் அறிக்கை விட்டிருப்பது எங்களுக்கு வருத்தத்தை தருகிறது. அவர் புறக்கணிப்பதற்காக சொல்லியிருக்கிற காரணங்கள் பல தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழக நலனிற்காக குரல் எழுப்புகிற பிரச்சனைகள் தான்.
அதற்காக யார் குடியரசுத் தலைவராக வந்தால் நமக்கென்ன என்கிற சித்தாந்தம் நல்லதல்ல.
தேசியத்தை தன் கட்சியிலேயே இணைத்திருக்கும் விஜயகாந்த் தனதுமுடிவை மறுபரிசீலனை செய்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications