சம்மன் வரவில்லை, வந்தால் சட்டப்படி சந்திப்பேன்: ரோசைய்யா
சென்னை: ஆந்திர லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் அனுப்பிய சம்மன் தனக்கு வந்து சேரவில்லை என்றும், வந்தால் வழக்கை சட்டப்படி சந்திக்கப் போவதாகவும் தமிழக ஆளுனர் ரோசைய்யா தெரிவித்துள்ளார்.
ரோசைய்யா ஆந்திர முதல்வராக இருந்தபோது அமீர்பேட்டை பகுதியில் அரசு கையகப்படுத்திய நிலத்தை உரியவர்களுக்கு திருப்பி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள நிலம் திரும்பி வழங்கப்பட்டதில் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும், இதில் அன்றைய முதல்வரான ரோசைய்யாவுக்கு தொடர்பு இருப்பதாகவும் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை தொடர்ந்து ஆகஸ்ட் 2ம் தேதி நேரில் ஆஜராகுமாறு தமிழக ஆளுனர் ரோசைய்யாவிற்கு ஹைதராபாத் லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்ப கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் ரோசைய்யா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு இதுவரை எந்த சம்மனும் வரவில்லை. இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூலமே நான் தெரிந்து கொண்டேன். அப்படி எனக்கு சம்மன் வந்தால் அதை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என்றார்.












Click it and Unblock the Notifications