குடியரசுத் தலைவர் தேர்தல்: சங்மாவுக்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு இல்லை?
ஆனாலும் நிச்சயம் தம்மை மமதா பானர்ஜி ஆதரிப்பார் என்று பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆகியவற்றின் வேட்பாளரான சங்மா நம்பிக்கை தெரிவித்திருந்தார். தொடர்ந்தும் மமதாவிடம் தாம் பேசிவருவதாகவும் கூறி வந்தார். இந்நிலையில் இன்று மமதவை நேரில் சந்திக்க சங்மா அனுமதி கோரியிருந்தார். ஆனால் சங்மாவை சந்திக்க நேரம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
காங்கிரசில் இருந்து விலகி தேசியவாத காங்கிரசை உருவாக்கி பின்னர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்து இங்கிருந்தும் விலகியவர்தான் சங்மா. அதேபோல் பாஜக ஆதரிக்கும் ஒரு வேட்பாளரை ஆதரிக்க மமதா தயாரில்லை என்று கூறப்படுகிறது. இதனால் சங்மாவுக்கு அனேகமாக திரிணாமுல் ஆதரவு இருக்காது என்றே கூறப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைப் போல் குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கவே வாய்ப்பிருக்கிறது என்றே தெரிகிறது.
மமதாவை சந்திப்பாரா பிரணாப்?
இந்த நிலையில் கொல்கத்தாவுக்கு இன்று இரவு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வருகை தருகிறார். கொல்கத்தாவில் இரவு தங்கியிருக்கும் பிரணாப் சனிக்கிழமை காலைதான் சொந்த கிராமத்துக்கு செல்கிறார். கொல்கத்தாவில் தங்கியிருக்கும் நேரத்தில் அவர் மமதாவை நேரில் சந்தித்து ஆதரவு கோருவாரா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகி இருக்கிறது. குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு மமதாவை தமது சகோதரி என்று பிரணாப் சுட்டிக்காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.