சென்னை குழந்தை கடத்தலில் திருப்பம்: நரபலி கொடுக்கப்பட்டதா?
சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் 6 மாத பச்சிளம் குழந்தையை கடத்தி கொலை செய்த வழக்கில் நரபலி கும்பலுக்கு தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ராதாகிருஷ்ணன் நகர் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் 6 மாத ஆண் குழந்தை கோகுல் கடத்தி கொலை செய்யப்பட்டார். ராஜேஷை அவரது மனைவி கோமதி 2-வது திருமணம் செய்துள்ளார். இதனால் முதல் கணவருக்கு இக்கொலையில் தொடர்பிருக்குமோ என்று போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால் வீட்டின் பின்புறம் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடலின் பல்வேறு பகுதிகளில் கீறப்பட்டு இருந்ததால் வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக குழந்தையின் கண், கை மற்றும் கால் ஆகிய இடங்களில் ஊசியால் குத்தி ரத்தம் எடுத்தது போல் இருக்கிறது. மேலும் சில இடங்களில் மஞ்சள், குங்குகம் பூசப்பட்டிருக்கிறது. இதனால் குழந்தையை நரபலி கொடுத்திருக்கலாமோ என்றும் சந்தேகிக்கின்றனர்.
கோமதியின் முன்னாள் கணவர் மோகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கோமதியின் முன்னாள் கணவர்தான் குழந்தையைக் கடத்தி கொலை செய்தாரா? அல்லது குழந்தையை நபரலி கும்பல் கடத்தியதா? அல்லது நரபலி கும்பலுக்காக முன்னாள் கணவர்தான் கடத்தினாரா? என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.