அதெப்படி இலங்கை அமைச்சர் சம்பிகா அவ்வாறு கூறலாம்: சிபிஎம் கண்டனம்
சென்னை: ஈழத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் பேசிய இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஆயுதப் போர் முடிந்து மூன்றாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படவில்லையே என இலங்கைத் தமிழர்கள் கடும் மன வேதனையில் உள்ளனர். இத்தருணத்தில் இலங்கை அமைச்சர் சம்பிகா ரணவகா மீண்டும் முள்ளிவாய்க்கால் உருவாகும் என்ற தொனியில் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கைத் தமிழர்களை அச்சுறுத்தும் வகையிலும், ஆத்திரமூட்டும் வகையிலும் சம்பிகா ரணவகா பேசியிருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கின்றது. இத்தகைய சூழலில் இலங்கைத் தமிழர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண இந்திய அரசு இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.