நாகர்கோவிலில் 100 காய் காய்க்கும் அதிசய பலாமரம்
நாகர்கோவில்: நாகர்கோவிலில் அடி முதல் உச்சி வரை 1000 காய்கள் காய்க்கும் அதிசய பலாமரம் ஒன்று உள்ளது. இதை பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
நாகர்கோவில் மறவன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் தனி்ஸ்லாஸ். அவர் அப்பகுதியிலேயே சொந்தமாக மர அறுவைக் கூடம் ஒன்றை வைத்துள்ளார். அந்த கூடத்தில் 70 அடி உயர பலாமரம் உள்ளது. ஆண்டுக்கு 2 முறை பலா சீசன் இருப்பினும் இந்த மரம் மட்டும் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் காய்க்கிறது.
இந்த மரம் தை மாதம் முதல் ஆனி வரை காய்க்கும். தற்போது காய்த்துக் கொண்டிருக்கும் இந்த மரத்தின் அடியில் இருந்து உச்சி வரை கொத்துக் கொத்தாக காய்கள் உள்ளன. அதிலும் ஒவ்வொரு கொத்திலும் சுமார் 17 முதல் 20 காய்கள் வரை உள்ளன. வழக்கமான பலா மரங்களில் காய்கள் பெரிதாக உருண்டு திரண்டு இருக்கும். ஆனால் இந்த மரத்தின் காய்கள் சிறியதாக 5 முதல் 10 கிலோ எடை கொண்டதாக உள்ளது.
இந்த மரத்தில் கனியும் பலத்தை சாப்பிட்டால் அது பிற மரத்தில் கிடைக்கும் பலாப்பழங்களை விட சுவையாக இருக்கும். அதனால் இந்த மரக் காய்களை வாங்க அப்பகுதி மக்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஒரு பழம் ரூ.25 முதல் 50 வரை விற்கப்படுகிறது.
இப்படி பிற மரங்களில் இருந்து வித்தியாசமாக உள்ள இந்த மரத்திற்கு அப்பகுதி மக்கள் 'ஆயிரம் காய் காய்க்கும் அதிசய பலாமரம்' என்று பெயர் வைத்துள்ளனர்.