ஆப்கான்: ஹோட்டலைத் தாக்கி, 17 பேரைக் கொன்ற தலிபான்கள்
காபூல்: வடக்கு காபூலில் உள்ள ஒரு ஹோட்டலை 3 தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்கியதில் 12 பொதுமக்கள் உள்பட 17 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார்கா ஆற்றுக்கு அருகே உள்ளது ஸ்போழ்மாய் ஹோட்டல். நேற்றிரவு 11 மணிக்கு ஆப்கான் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் 3 பேர் திடீர் என்று ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்களிடம் வெடிகுண்டுகள், ராக்கெட்டுகள், அதிநவீன ஆயுதங்கள் உள்ளன. இரவு 11 மணிக்கு துவங்கிய துப்பாக்கிச்சூடு விடிய விடிய சுமார் 6 மணி நேரம் நடந்தது.
விடியற்காலையில் கூட தூப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் ஒரு போலீஸ்காரரும், 2 தீவிரவாதிகளும் பலியாகினர்.
இது குறித்து ஆப்கான் தேசிய ராணுவத்தைச் சேர்ந்த கமாண்டர் கதம் ஷா ஷாயம் கூறுகையில், ஹோட்டலில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகள் இறந்துவிட்டனர். 4 விருந்தாளிகள் 2 மாடி ஹோட்டலின் ஜன்னல் வழியாக கீழே குதித்து தப்பினர் என்றார்.
இந்நிலையில் போலீசார் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சூடு நண்பகல் 12 மணிக்கு மேல் தான் முடிந்தது. இதில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். மேலும் இந்த தாக்குதலில் 12 பொது மக்கள், 4 பாதுகாவலர்கள் மற்றும் 1 போலீசார் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த ஹோட்டலில் வெளிநாட்டவர்கள் மது அருந்துவதும் மற்றும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவதுமாக இருந்ததால் தான் அதை தாக்கியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் தெரிவித்தார்.