அரசு நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கிய விவகாரம்: கர்நாடக சட்ட அமைச்சர் ராஜினாமா
பெங்களூர்: கர்நாடகத்தில் அரசுக்கு சொந்தமான நிலத்தை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டில் சட்டத்துறை அமைச்சர் சுரேஷ்குமார் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக சட்ட அமைச்சரான சுரேஷ்குமார் பெங்களூரில் அரசுக்குச் சொந்தமான 4 ஆயிரம் சதுர அடியை அடிமாட்டு விலைக்கு வாங்கினார் என்பது குற்றச்சாட்டு. ரூ3கோடி மதிப்பிலான நிலத்தை தமது பெற்றோர் பெயரில் ரூ10 லட்சத்துக்கு வாங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தினார் என்று புகார் கூறப்பட்டது.
இதையடுத்து தம் மீது புகார் வந்துள்ள நிலையில் தார்மீக அடிப்படையில் சட்டத்துறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக முதலமைச்சர் சதானந்தா கவுடாவிடம் கடிதம் கொடுத்தார். ஆனால் அவரது ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் சதானந்தா ஏற்கவில்லை என்றும் அதனால் ராஜினாமா கடிதத்தை அவரது மேசையில் வைத்து விட்டு சுரேஷ்குமார் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே தாம் வாங்கிய 4 ஆயிரம் சதுர அடி இடத்தை பெங்களூரு வளர்ச்சி ஆணையத்திடம் திருப்பி ஒப்படைத்து விடுவதாக கடிதம் ஒன்றை சுரேஷ்குமார் அனுப்பி இருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications