2 நாள் போராட்டத்துக்குப் பின் மீண்டு வந்த 6 வயது பிரின்ஸ்.. ஒரு பிளாஷ்பேக்!
ஹரியானாவின் குருஷேத்ராவில் இப்படித்தான் 2006ம் ஆண்டு பிரின்ஸ் என்ற 6 வயது சிறுவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்து விட்டான். இதனால் நாடே பெரும் பரபரப்பில் மூழ்கியது. கிட்டத்தட்ட 2 நாள் போராட்டத்துக்குப் பின்னர் அச்சிறுவனை ராணுவ மீட்புக் குழுவினர் பத்திரமாக உயிருடன் மீட்டனர்.
ஆனால் இன்று அதே ஹரியானாவில், சிறுமி மஹி போர்வெல் கிணற்றில் விழுந்து கிட்டத்தட்ட 4 நாட்கள் உயிருக்குப் போராடி பரிதாபமாக உயிரிழந்துள்ளாள்.
இதேபோன்று நாட்டில் கடந்த காலத்தில் நடந்த சில சம்பவங்கள்
- ஆக்ராவில் 15 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த 2 வயது சோனு என்ற சிறுவன் பத்திரமாக மீ்ட்கப்பட்டான்.
- ஜெய்ப்பூரில் 2009ம் ஆண்டு 25 அடி ஆழ போர்வெல் கிணற்றில் ஐந்து வயது சிறுவன் விழுந்து விட்டான். அந்த சிறுவனை ராணுவ மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுக் கொண்டு வந்தனர். அதே போல, அந்த ஊருக்கு அருகே தாசா மாவட்டத்தில் 50 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த அஞ்சு குஜ்ஜார் என்ற 4 வயது சிறுமியும் பத்திரமாக மீ்ட்கப்பட்டாள்.
2009ம் ஆண்டு குஜராத் மாநிலம் பலன்பூர் என்ற கிராமத்தில் 100 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் கிர்தான் பிரனாமி பரிதாபமாக உயிரிழந்தான்.
- ஆந்திர மாநிலம் வாரங்கல் அருகே 35 அடி ஆழ போர்வெல் கிணற்றில் சிக்கிய 2 வயது தராவத் மகேஷ், 24 மணி நேரம் உயிருக்குப் போராடி உயிரிழந்தான்.
- 2011ம் ஆண்டு தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தில் 200 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இப்படி தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளிலும் போர்வெல் கிணறுகளில் விழுந்து உயிரிழக்கும் சிறார்களின் எண்ணிக்கை தொடர்கதையாகியுள்ளது. இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாத நிலையும் தொடர்வதாக மக்கள் குமுறுகின்றனர்.