தொலைபேசியில் பேசிய பிரணாப் முகர்ஜி தம்மிடம் ஆதரவு கோரவில்லை: எல்.கே. அத்வானி
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது தம்மை தொடர்பு கொண்டு பேசிய பிரணாப் முகர்ஜி தமக்கு ஆதரவு தருமாறு கோரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்.
அத்வனி தமது ப்ளாக்கில் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:
பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் முதலில் பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் என்னிடம் பேசினார். அதன் பின்னர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
அப்போது தம்மை வேட்பாளராகத் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று மட்டும்தான் பிரணாப் கூறினார். தமக்கு ஆதரவு தருமாறு கோரவில்லை. 1970-ம் ஆண்டு முதல் தமக்கும் பிரணாப்புக்குமான உறவு குறித்து பேசிக் கொண்டோம். ராஜ்யசபாவில் பணியாற்றிய காலம் குறித்தும் மட்டும் இருவரும் பேசிக் கொண்டோம் என்று அத்வானி அதில் குறிப்பிட்டுள்ளார்.
பிரணாப்பை தேர்வு செய்வதற்கு முன்பே தங்களிடம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தரப்பு பேசியிருக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு பாஜக கூறியிருந்தது. இதனால்தான் சங்மாவை ஆதரிக்க வேண்டியிருக்கிறது என்றும் பாஜக விளக்கம் அளித்திருந்தது.
தற்போது வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட பிரணாப் ஆதரவு கோரவில்லை என்று அத்வானி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications