அம்மா அழைத்தால் அதிமுகவுக்குப் போய் விட வேண்டியதுதான்... எஸ்.வி.சேகர்

காமெடி நடிகராக இருந்து வந்த எஸ்.வி.சேகர் ஆரம்பத்தில் பாஜகவில் செயல்பட்டார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்து எம்.எல்.ஏவாக்கினார் ஜெயலலிதா. ஆனால் போகப் போக அவருக்கும், ஜெயலலிதாவுக்கும் இடையிலான நட்பு கசந்து போனது, கடந்த திமுக ஆட்சியின் கடைசிக் கட்டத்தில் சேகரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.
எஸ்.வி.சேகரும் மு.க.ஸ்டாலின், திமுக என நெருக்கம் காட்டி வந்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிமுகவில் இணைய ஆவலாக உள்ளார் எஸ்.வி.சேகர். இடையில் காங்கிரஸ் பக்கம் போகப் பார்த்தார். ராகுல் காந்தியைக் கூட இதுதொடர்பாக சந்தித்தார். ஆனால் அது என்ன ஆனது என்பது தெரியவில்லை.
இந்த நிலையில், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த பில்லாலி தொட்டியில் உள்ள ஸ்ரீசுகப்பிரம்ம மகரிஷி கோவில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழாவில் நடிகர் எஸ்.வி சேகர் கலந்து கொண்டார்.
அங்கு அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் விரும்பி சேர்ந்த ஒரே கட்சி அதிமுகதான். 10-ல் குரு வந்தால் பதவி பறிபோகும் என்பார்கள்.அது என் வாழ்க்கையில் நடந்தது. எந்த பலனையும் எதிர்பார்க்கவில்லை. அரசியலில் நேர்மையாக இருப்பேன்.
அதிமுகவில் சேருவதற்காக விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் கொடுத்துள்ளேன்.அவருடைய அழைப்புக்காக எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.
படித்து விட்டால் யார் காலிலும் பதவிக்காக விழலாம் என்ற காலம் வந்து விட்டது. அந்த மனோபாவம் மாறவேண்டும். பெற்றோர்களை மதிக்க வேண்டும். வளர்ந்து வரும் முதியோர் இல்லங்களை தடுக்க வேண்டும். தெய்வ நம்பிக்கை இருக்கும் வரை யார், யார் காலிலும் விழ வேண்டியது இல்லை.
கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி.தமிழ்நாட்டில் இந்தியை படிக்க விடாமல் தடுத்ததால் 4 தலைமுறை தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியை தடுத்தவர்கள் வாழ்கிறார்கள். அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை தேவை என்றார் சேகர்.












Click it and Unblock the Notifications