சுபாஷ் பண்ணையார், 'ராக்கெட்' ராஜாவை கொல்ல எதிர்கோஷ்டி திட்டம்: கூண்டோடு பிடிக்க போலீஸ் பிளான்

தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் தலைவர் பசுபதி பாண்டியன் கடந்த ஜனவரி மாதம் 10ம் தேதி திண்டுக்கல் நந்தவனபட்டியில் உள்ள அவரது வீட்டு முன்பு ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டார்.
மூலக்கரை சுபாஷ் பண்ணையார் குடும்பத்தினருக்கும், அவருக்கும் இருந்த முன்பகையே கொலைக்கு காரணம் என தெரிய வந்தது. இது குறித்து சுபாஷ் பண்ணையார் உள்பட 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திண்டுக்கல் நந்தவனபட்டி நிர்மலா, விருதுநகர் சொக்கன்புதூர் பாஷா, ராஜபாளையம் முகவூர் சன்னாசி, நடராஜன் ஆகியோர் கைதாகினர். முக்கிய குற்றவாளியான சுரண்டையைச் சேர்ந்த கோழி அருள் ஆறுமுகநேரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
நிபந்தனை ஜாமீனில் விடுதலையான கோழி அருள் தினமும் சுரண்டை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார். மற்ற 4 பேரும் திண்டுக்கல் தாடிகொம்பு போலீசில் கையெழுத்திட்டு வருகின்றனர்.
கடந்த இரு வாரத்திற்கு முன் சுரண்டை போலீசில் கையெழுத்திட வந்த கோழி அருளை கொலை செய்ய ஒரு கும்பல் முயன்றது. இதேபோன்று தாடிகொம்பு காவல் நிலையத்தில் கையெழுத்திட வந்த மாடசாமி, சன்னாசி, நடராஜன் வந்த கார் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் கார் டிரைவர் வாசுதேவன் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
விசாரணையில் திண்டுக்கல் கொலைக்கு பழிக்குப் பழியாக அவரது ஆதரவாளர்கள் தான் வெடிகுண்டு்களை வீசியதாக தெரிய வந்தது. இதனால் எந்த தரப்பிலும் எதுவும் நடக்கலாம் என உளவுத் துறையினர் எச்சரித்தனர். இதையடுத்து உஷாரான போலீசார் முக்கியப் புள்ளிகளின் ஆதரவாளர்களையும், கூட்டாளிகளையும் கண்காணித்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் ஒரு விழா நடைபெற உள்ளது. அதில் போலீசிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வரும் ராக்கெட் ராஜா, சுபாஷ் பண்ணையார் ஆகியோர் ரகசியமாக கலந்து கொள்ள உள்ளதாகவும், இதற்காக வரும் அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி அரிவாளால் வெட்டி கொல்ல இரண்டு தரப்பினர் திட்டமிடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
இது குறித்து உளவுத்துறையினர் தங்களது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸ் உயர் அதிகாரிகள் அந்த கும்பலை கூண்டோடு பிடிக்க வியூகம் அமைக்குமாறு நெல்லை மாநகரம் மற்றும் மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications