எதியூரப்பா நெருக்கடி.. கர்நாடக முதல்வர் சதானந்த கெளடாவை மாற்ற பாஜக முடிவு?
பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வர் சதானந்தா கவுடாவை மாற்றுவதற்கு பாரதிய ஜனதா மேலிடம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கர்நாடக மாநிலத்தில் சுரங்க முறைகேட்டில் சிக்கிய எதியூரப்பா பதவியில் இருந்து இறங்கியதைத் தொடர்ந்து சதானந்தா கவுடா முதல்வராக நியமிக்கப்பட்டார். ஆனால் எதியூரப்பாவும் அவரது ஆதரவாளர்களும் சதானந்தாவுக்கு குடைச்சல் கொடுத்தே வந்தனர். சிறையிலிருந்து வெளியே வந்த எதியூரப்பா, தமக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று பலமுறை போர்க்கொடி தூக்கிப் பார்த்தார். ஆனால் எந்தப் பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் சதானந்த கவுடா பதவியேற்ற பிறகு 10 மாதங்களாக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைக் கூட்டாததால் அந்தக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று புது நெருக்கடி ஒன்றை எதியூரப்பா ஆதரவாளர்கள் ஏற்படுத்தினர். இந்தக் கூட்டத்தில் எதியூரப்பாவின் ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக தேர்ந்தெடுக்கவும் அவர்கள் திட்டமிட்ட்டிருந்தனர்.
இந்நிலையில் கத்காரியின் வீட்டு திருமணத்தில் எதியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் கர்நாடக மாநில பிரச்சனைக்கு 1 வாரத்தில் தீர்வு காணப்படும் என்று கத்காரி உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வரும் 28-ந் தேதியன்று பாஜகவின் மூத்த நிர்வாகி சதீஷ் மற்றும் கர்நாடக மாநில பாஜக பொறுப்பாளர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் பெங்களூரில் முகாமிட உள்ளனர். பெங்களூரில் எதியூரப்பா, சதானந்தா கவுடா மற்றும் பாஜக தலைவர் ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆலோசனை நடத்தும் இவர்கள் மூத்த அமைச்சர்களையும் சந்திக்க உள்ளனர்.
இந்த ஆலோசனையின் போது முதல்வர் சதானந்தா கவுடாவை மாற்றிவிட்டு வேறு ஒருவரை முதல்வராக்க முடிவு செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications