சிறை நிரப்பும் போராட்டம் திமுக கோஷ்டிகளை ஒன்றுபடுத்தும்: கருணாநிதி நம்பிக்கை

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
22-6-2012 அன்று நடைபெற்ற திமுக தலைமை செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் - வருகிற ஜுலை 4ம் தேதியன்று காலை தொடங்கி சிறை நிரப்பும் போராட்டம் நடத்துவதென்றும், அதை நடத்துவதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றியும் விளக்கமாகத் தெரிவித்ததோடு - போராட்டத்திற்கு முன்னேற்பாடாக மாவட்டத் தலைநகரங்களிலும், வட்டம் மற்றும் பெருநகரங்களிலும் அறப்போர் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்துவதென்றும் முடிவு செய்ததோடு - அறப்போர் விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடங்களையும், அதில் கலந்து கொள்வோர் பற்றிய விவரங்களையும் விரைவில் தலைமைக்கழகம் அறிவிக்குமென்று சொல்லப்பட்டிருந்தது.
திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளர்களாக சுமார் 500 பேர் இருக்கிறார்கள். முப்பதுக்கும் மேற்பட்ட மாவட்டக் கழகங்கள் இருக்கின்றன. அதுதவிர மாநகர் மாவட்டங்கள் இருக்கின்றன. கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர்களாக ஆ.ராசாவும், திருச்சி என்.சிவாவும் செயற்குழு தீர்மானத்திற்குப் பிறகு அவசர அவசரமாக மாவட்டக் கழகச் செயலாளர்களையும், கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகியோரையும் தொடர்புகொண்டு கலந்தாலோசித்து பொதுக்கூட்டம் நடைபெறும் தேதிகளையும், பேச்சாளர்களையும் அறிவித்ததோடு, மற்ற பேச்சாளர்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் எந்தெந்தப் பேச்சாளர்கள் என்ற பட்டியலையும் அறிவித்திருந்தார்கள். ஆனாலும் பேச்சாளர்கள் கூட்டத்தில் என்னை விட்டுவிட்டார்களே, போராட்டக்களத்திற்கு என்னை அழைக்காமல் இருந்து விட்டார்களே, என் பெயரைக் குறிப்பிடவில்லையே என்பதில் சிலருக்கு வருத்தம்!.
விரல்விட்டு எண்ணத்தக்க ஒருசிலர் இவ்வாறு கோபித்துக் கொண்ட போதிலும், ஒட்டுமொத்தமாக இந்தப் போராட்டத்திற்காக கழகத் தோழர்கள் இடையே ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பற்றி பல மாவட்டக் கழகச் செயலாளர்களும், முன்னணியினரும் தொடர்ந்து தொடர்பு கொண்டு செய்திகளைச் சொல்லும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
சில மாவட்டங்களில் கழகத்தினரிடையே இதற்கு முன்பு இருந்த சிறு சிறு மாச்சரியங்களை எல்லாம் மறந்துவிட்டு, இந்த போராட்டக் களத்திலே உணர்வுப்பூர்வமாக ஒன்றாக செயல்படுகிறார்கள் என்ற செய்திகளும் மன நிறைவளித்திடும் வண்ணம் வந்து கொண்டுள்ளன. உதாரணத்திற்கு ஒன்று. நேற்றைய தினம் ரிதீஷ் எம்.பி. ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறார்.
செயற்குழு நடைபெற்ற போது அதிலே பேசிய அந்த மாவட்ட செயலாளர் சுப.தங்கவேலன், தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைவரும் ஒற்றுமையாக இந்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று பேசியதையொட்டி, நான் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் கழக தோழர்கள் ஒற்றுமையாக போரிடுவோம் என்று அறிவித்திருப்பதே, இந்த போராட்டம் வெற்றி பெறும் என்பதை உணர்த்துகிறது' என்று குறிப்பிட்டிருந்தேன்.
அதைப்பற்றி தம்பி ரிதீஷ் எழுதும்போது, தாங்கள் செயற்குழுவில் எங்கள் மாவட்டத்தை பற்றி வருத்தப்பட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது. உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான் தொண்டர்களாகிய எங்களை போன்றவர்களின் கடமை. இனிமேல் எங்கள் மாவட்டத்தில் நீங்கள் வருந்தும்படியாக எந்த நிகழ்ச்சியும் நடைபெறாது.
தாங்கள் வருந்தும்படி ஏதாவது நடந்திருந்தால் எங்களை மன்னிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் கோபதாபங்களின் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் உள்ள கோஷ்டிபூசல்களை ஜுலை 4ம் தேதி போராட்டம் ஒற்றுமைப்படுத்தும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications