புதுவையில் நீதி கிடைக்காது: சங்கரராமன் கொலை வழக்கை சென்னைக்கு மாற்ற குடும்பத்தினர் கோரிக்கை
புதுச்சேரி: காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை நீதிமன்றத்தில் நடந்தால் நீதி கிடைக்காது. அதனால் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணை முடிவைடந்த நிலையில் சங்கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த்சர்மா ஆகியோர் சாட்சிகளிடம் மறுவிசாரணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீது நேற்று விசாரணை நடைபெறுவதாக இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட 24 பேர்களில் ரகு, சுந்தரேச அய்யர் உள்பட 9 பேர் ஆஜர் ஆனார்கள். ஆனால் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 15 பேர் ஆஜர் ஆகவில்லை. சங்கரராமனின் மனைவி பத்மாவும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் சங்கரராமனின் மகன் ஆனந்த்சர்மா நீதிபதி முருகனிடம் மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதில், புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்தால் நீதி கிடைக்காது. எனவே, இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளோம். இதில் முடிவு தெரியும் வரை புதுவை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடத்தக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications