பாம்பனில் மீனவர்களுக்கு இலவச வாக்கி டாக்கி வழங்கிய அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ்
ராமநாதபுரம்: கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களுக்கு அமைச்சர்கள் ஜெயபால், சுந்தர்ராஜ் ஆகியோர் விலையில்லா (தகவல் தொடர்பு சாதனம்) வாக்கி டாக்கி வழங்கினர்.
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் புயல், கடல் சீற்றம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது அவர்களுக்கு உதவி செய்யவும், இந்திய எல்லையைத் தாண்டிச் செல்லும் போது எச்சரிக்கை செய்யவும் மீனவர்களுக்கு விலையில்லா வாக்கி டாக்கி வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா உறுதி அளித்திருந்தார். அதன்படி மீனவர்களுக்கு விலையில்லா வாக்கி டாக்கி வழங்க அவர் உத்தரவிட்டார். இதற்காக ரூ.7.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தமிழகத்திலேயே முதல் முறையாக ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் உள்ள மீனவர்களுக்கு பாம்பன் சமுதாயக் கூடத்தில் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமையில் கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை செயலாளர் ககன்ஜித்சிங் பேடி, மீன்வளத்துறை இயக்குநர் முனியநாதன் ஆகியோர் முன்னிலையில், மீன்வளத்துறை அமைச்சர் கே.ஏ.ஜெயபால், கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் எஸ்.சுந்தர்ராஜ் ஆகியோர் 18 நாட்டுப்படகு மீனவர்களுக்கு விலையில்லா (தகவல் தொடர்பு சாதனம்) வாக்கி டாக்கி வழங்கினர்.
இதன் மூலம் தமிழக மீனவர்களை அதிகாரிகள் கண்காணிப்பது எளிதாக இருக்கும் என்பதால் மீனவர்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது அவர்களை விரைந்து காப்பாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுவரை பொது மக்களுக்கு விலையில்லா அரிசி, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி என தமிழக அரசு வழங்கி வந்தது. இந்த நிலையில் மீனவர்களுக்கு தற்போது விலையில்லா வாக்கி டாக்கி வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications