5 பல்கலைகழகங்களுக்கு துணைவேந்தரை ஏன் நியமிக்கவில்லை? கருணாநிதி கேள்வி
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மருத்துவத் துறை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வரும் புதிய சட்ட மசோதாவை எதிர்த்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். மருத்துவப் பட்டதாரிகளை மருத்துவம் செய்ய அனுமதிக்க தகுதித் தேர்வு நடத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும். மருத்துவச் சேவையை வியாபாரமாக்கும் மருத்துவமனை ஒழுங்கு முறை சட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தேசிய சுகாதார மனிதவள ஆணைய மசோதாவினை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்டட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள மருத்துவர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் திறமையானவர். போராட்டத்தில் ஈடுபடுவோர் அவரை நேரில் சந்திக்க முயற்சியெடுத்து அவரிடம் விவரம் கூறினால் அதில் உள்ள நியாயங்களை ஏற்கக் கூடியவர். எனவே, இந்தப் பிரச்னையில் இரு தரப்பினரும் சந்தித்துப் பேசினாலே சுமூக முடிவு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் இரு தரப்பினரும் ஈடுபட வேண்டும்.
தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து தென்னை விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் அரசை எதிர்த்துப் போராடியவர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அந்த விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்வதோடு, தென்னை விவசாயிகள் சங்கத்தினரை அழைத்துப் பேச அரசு முன்வர வேண்டும்.
5 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பணியிடம் காலியாக இருக்கிறது. இது தொடர்பாக முன் கூட்டியே குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று ஆளுநரிடம் அனுமதி பெற்று துணைவேந்தர் பதவிகளில் சரியானவர்களை ஏன் நியமிக்கவில்லை?
திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல திட்டங்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதைப் போல மெட்ரோ ரயில் திட்டம் திருவொற்றியூர் வரை நீட்டிக்கப்படும் என்ற திமுக அறிவிப்பையும் அரசு கிடப்பில் போடுவதற்கான முயற்சியில் ஈடுபட்டு அதற்கான பங்கீட்டுத் தொகையை அரசின் சார்பில் செலுத்தாமல் இருக்கின்றனதாம்.
மக்கள் நலத்திட்டங்களில் கூட அதிமுக அரசு இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.