நித்யானந்தா மனுவுக்கு பதில் கேட்டு லெனின் கருப்பன், ஆர்த்தி ராவுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்
சென்னை: நித்யானந்தா மனு குறித்து பதில் அளிக்குமாறு லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் மற்றும் சேதுமாதவனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மதுரை இளைய ஆதீனம் நித்யானந்தா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
தமிழகத்திலும், கர்நாடகாவிலும் என் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் பற்றி லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் மற்றும் சேதுமாதவன் ஆகிய மூவரும் அவதூறாகப் பேசி வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது அது பற்றி வெளியில் பேசக் கூடாது என்று சட்ட விதிகளில் கூறப்பட்டுள்ளது.
எனவே என் மீது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றி லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ், சேதுமாதவன் மூவரும் பேச தடை விதிக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் இது குறித்து பதில் அளி்ககுமாறு லெனின் கருப்பன், ஆர்த்தி ராவ் மற்றும் சேதுமாதவனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை வரும் 5ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.