விபத்தில் பலியானவர் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசு விரைவுப் பேருந்து ஜப்தி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பேருந்து மோதி பெண் இறந்த வழக்கில் அவரது குடும்பத்தாருக்கு நஷ்ட ஈடு வழங்காததால் அரசு விரைவுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
விழுப்புரம் அருகே உள்ள சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி காமாட்சி(26). அவர் 12.4.2001 அன்று சென்னை நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியே வந்த அரசு விரைவுப் பேருந்து மோதி பலியானார். இதற்கு நஷ்ட ஈடு வழங்கக் கோரி விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சங்கர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நஷ்ட ஈடாக சங்கர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்து 46,000 வழங்க வேண்டும் என்று அரசு விரைவுப் பேருந்து போக்குவரத்துக் கழகத்திற்கு உத்தரவிட்டது. ஆனால் உரிய நஷ்ட ஈட்டை அரசு விரைவுப் பேருந்து போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. இதையடுத்து சங்கர் தரப்பில் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகும் நஷ்ட ஈடு வழங்காமல் போக்குவரத்துக் கழகம் காலம் தாழ்த்தி வந்தது.
இந்த நிலையில் 7.6.12 அன்று இந்த வழக்கு நீதிபதி கயல்விழி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.6 லட்சத்து 28,000க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில் அரசு விரைவுப் பேருந்தை ஜப்தி செய்து வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து விழுப்புரம் பேருந்து நிலையத்திற்கு வந்த சென்னை-சேலம் அரசு விரைவுப் பேருந்தை ஜப்தி செய்தனர். கடந்த திமுக ஆட்சியில் 150க்கும் மேற்பட்ட ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகளை மீட்டதாக அதிமுக அரசு கூறி வந்தது. இந்த நிலையில் அதிமுக அரசு பதவியேற்றும் அதே நிலை நீடிப்பதாக போக்குவரத்து தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.