அமெரிக்காவில் லெஸ்பியன்கள் இருவர் மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி
டெக்ஸாஸ்: அமெரிக்காவில் லெஸ்பியன் தோழிகள் இருவர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியாகிவிட்டார். மற்றொருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸை செர்ந்த மொல்லி ஜூடித் (வயது 19), அவரது தோழி மேரி கிறிஸ்டின் (வயது 18) இருவரும் நெருங்கிய தோழிகள் மற்றும் லெஸ்பியன் உறவு உள்ளவர்கள் என்று கூறப்படுகிறது. இருவரும் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் டெக்ஸாஸின் கோர்பஸ் கிறிஸ்டி பூங்கா பகுதியில் கிடந்தனர்.
இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி மொல்லித் உயிரிழந்துவிட்டார். மற்றொருவரான மேரியின் உடல்நிலை தேறிவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும் இருவரும் லெஸ்பியன் உறவு கொண்டவர்கள்தானா? இருவர் மீதும் ஓரின சேர்க்கைக்கு எதிர்ப்பான நபர்கள்தான் துப்பாக்கிச் சூடு நடத்தினரா? என்பது குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் "லெஸ்பியன் மீது" தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று கலிபோர்னியாவின் சான்பிரான்ஸிஸ்கோவில் ஹார்வே மில்க் வளாகத்தில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதில் முக்கிய அம்சம் என்னவெனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் வளாகத்துக்கு சூட்டப்பட்டுள்ள ஹார்வே மில்க் என்பவர் ஓரினச்சேர்க்கையாளர். அரசியல்வாதியான அவர் 1978-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டவர்.












Click it and Unblock the Notifications