குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா வென்றால் நாடாளுமன்றத்துக்கு இடைத் தேர்தல்: சங்மா மகன்
ஷில்லாங்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் ஆதரிக்கும் பி.ஏ.சங்மா வெற்றி பெற்றால் நாடாளுமன்ற மக்களவைக்கு இடைத் தேர்தல் வரக்கூடும் என்று சங்மாவின் மகன் ஜேம்ஸ் கான்ராட் சங்மா கூறியுள்ளார்.
ஷில்லாங்கில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் ஜேம்ஸ் கான்ராட் சங்மா பேசியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பி.ஏ.சங்மா, பழங்குடி இனத்தவர் என்ற அடையாளத்தை பயன்படுத்துவதில் தவறேதும் இல்லை. இந்தியா பல்வேறு கலாசாரங்களை பிரதிபலிக்கக் கூடியது. இதில் சிறுபான்மையினராக உள்ள பழங்குடி இனத்தவர் நாட்டின் பெரிய பதவியை பெற வேண்டும் என்று முனைப்பு காட்டுவத் சரியானது ஒன்றுதான்.
இஸ்லாமிய சமூகத்தில் இருந்து ஜாஹிர் உசேன், தலித் சமூகத்தில் இருந்து கே.ஆர். நாராயணன் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாட்டின் முதலாவது பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் நாட்டின் குடியரசுத் தலைவராக முதல் முறையாக பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா தேர்ந்தெடுக்கப்படுவார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் போட்டியிடும் சங்மாவும் பிரணாப் முகர்ஜியும் நாட்டுக்காக சேவையாற்றியவர்கள். இருவருமே குடியரசுத் தலைவர் பதவிக்குத் தகுதியானவர்களே. தற்போதைய குடியரசுத் தலைவர் தேர்தலானது 1969-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலை பிரதிபலிப்பதாக உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி உடைந்து போய்விட்டது. 3வது அணிதான் சங்மாவை ஆதரித்திருக்கிறது. இதன் மூலம் 3-வது அணி உருவாகியிருக்கிறது. இது நிச்சயம் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்றும். ஒருவேளை சங்மா வெற்றி பெற்றால் நாடு இடைத்தேர்தலை சந்திக்க நேரிடவும் வாய்ப்பிருக்கிறது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications