ஒரு நாளாவது சிறையில் வைக்க வேண்டும் என்பதற்காக கே.என்.சேகர் கைது: ராமதாஸ் தாக்கு
சென்னை: பாமக துணை தலைவர் கே.என். சேகரை ஒரு நாளாவது சிறையில் வைக்க வேண்டும் என்பதற்காக காவல்துறை நீதிபதியிடம் பல்வேறு காரணங்களைக் கூறி அவரை கைது செய்துள்ளது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாட்டாளி மக்கள் கட்சியின் துணைத் தலைவரும், அம்பத்தூர் நகராட்சியின் முன்னாள் தலைவருமான கே.என்.சேகரை தவறான குற்றச்சாட்டின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சென்னை கொரட்டூர் பகுதியில் உள்ள ஒரு நிலத்தை 2 பேருக்கு விற்பனை செய்ததாக கே.என்.சேகர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய நிலம் 2 பேருக்கு தவறுதலாக விற்பனை செய்யப்பட்டிருப்பதை தாமதமாக உணர்ந்த சேகர், அதனால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை சரி செய்வதாக உறுதி அளித்திருக்கிறார்.
ஆனால் அதற்குள்ளாகவே காவல் துறையினர் சேகரை விசாரணைக்காக அழைத்து கைது செய்துள்ளனர். ஜார்ஜ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் சேகர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் ஜார்ஜுக்கு நிலத்தை சேகர் விற்பனை செய்யவில்லை. சேகரிடம் இருந்து நிலத்தை வாங்கிய தவமணி என்பவர்தான் ஜார்ஜுக்கு நிலத்தை விற்பனை செய்திருக்கிறார்.
ஜார்ஜ் அளித்த புகாரின் அடிப்படையில் தவமணி மீதுதான் காவல் துறையில் வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் தவமணியை விசாரிக்காமல் நேரடியாக சேகர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் கைது செய்தது சட்டத்திற்கு எதிரானது. எனினும் ஜார்ஜ் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக அவருக்கு சேரவேண்டிய பணத்தை சேகர் கொடுத்து விட்டார்.
இதையடுத்து ஜார்ஜும் நீதிமன்றத்தில் நேர் நின்று தனக்கு பணம் கிடைத்து விட்டதாகவும், சேகர் மீதான புகாரை திரும்ப பெறுவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் சேகரை ஒருநாளாவது சிறையில் அடைத்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நீதிபதியிடம் காவல்துறையினர் பல்வேறு காரணங்களை கூறி அவரை சிறையில் அடைத்துள்ளனர்.
அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பாமக துணைத் தலைவர் கே.என்.சேகர் மீது போடப்பட்டுள்ள வழக்கை காவல்துறையினர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று அவர் அதி்ல் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications