எம்.பி., எம்.எல்.ஏக்களின் ஓட்டு ரகசியம் காக்கப்படும்: பிரவீண் குமார்
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சட்டசபை கொறடா உத்தரவிட முடியாது. எனவே, எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற தகவலை ரகசியமாக வைத்துக் கொள்ள முடியும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியுள்ளார்.
நாட்டின் 13 வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பி.ஏ. சங்மாவும் வேட்பாளர்களாக களம் இறங்கி உள்ளனர். தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை வருகிற 2-ந்தேதி நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற 4-ந்தேதி கடைசி நாள் ஆகும். 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடத்துவதற்கான அதிகாரியாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற செயலாளர் ஜமாலுதீன் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர்கள் தமிழ்நாட்டில் குடியரசுத் தேர்தல் ஓட்டுப் பதிவுக்கான முன் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
ஓட்டுச்சீட்டுகளை போடுவதற்கான ஓட்டுப்பெட்டி மற்றும் உபகரணங்கள் மாநில செயலகம் மூலம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டசபை குழு அறையில் ஓட்டுப்பதிவு நடைபெறும். இதற்கான முன் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் தேர்ந்து எடுக்கப்பட்ட 234 எம்.எல்.ஏ.க்களுக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போடுவது எப்படி? என்பது குறித்து தபால் மூலம் விளக்க கடிதம் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டி உறுதி செய்யப்பட்டதும் இதற்கான கடிதங்கள் அனைத்தும் எம்.எல்.ஏ.க்களுக்கும் தேர்தல் அதிகாரி மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. எம்.பி.க்களுக்கும் இதுபோன்ற கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. மாநில மற்றும் டெல்லியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் மூலம் இவை அனுப்பப்படும்.
மாநிலங்களில் ஓட்டுப்போட்டு முத்திரையிடப்பட்ட ஓட்டுப்பெட்டிகள் 2 தேர்தல் அதிகாரிகள் மூலம் டெல்லிக்கு விமானத்தில் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு மேல்சபை செயலகத்திடம் ஒப்படைக்கப்படும். மேல்சபை எம்.பி. தேர்தல் போன்று இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்று சட்டசபை கொறடா உத்தரவிட முடியாது.
எனவே, எம்.எல்.ஏ.க்கள் யாருக்கு ஓட்டுப் போட்டார்கள் என்ற தகவலை ரகசியமாக வைத்துக் கொள்ள முடியும். குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப்போடும் நடைமுறைகள் அனைத்திலும் ரகசியம் காக்கப்படும் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.க்களுக்கான ஓட்டுப்பதிவு டெல்லி பாராளுமன்ற கட்டிடத்தில் நடக்கிறது. எம்.எல்.ஏ.க்களுக்கான ஓட்டுப்பதிவு மாநில தலைமைச் செயலகங்களில் நடைபெறுகிறது. முன் அனுமதி பெற்ற எம்.பி.க்கள் மாநில தலைமைச் செயலகங்களில் ஓட்டுப் போடலாம். நியமன எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு ஓட்டு கிடையாது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெறும் 4-ந்தேதிக்கு பிறகுதான் தேர்தல் நடைபெறுமா? என்பது உறுதி செய்யப்படும். தேர்தல் இருந்தால் போட்டியிடுபவர்களின் பெயர்களுடன் ஓட்டுச்சீட்டு அச்சிடப்படும். இதற்கான மாதிரி சீட்டு டெல்லி மேல்சபை செயலகத்தில் இருந்து மாநிலங்களுக்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் ஓட்டுச்சீட்டு தயார் ஆகும்.
இந்த ஓட்டுச்சீட்டில் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் ஆங்கிலத்திலும், அந்தந்த மாநில மொழியிலும் அச்சிடப்படும். தமிழ்நாட்டில் அச்சிடப்படும் வாக்குச்சீட்டில் ஆங்கிலம், தமிழில் பெயர் மற்றும் விவரங்கள் அச்சிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications