செல்போனில் என்ன பேச்சு...கண்டித்த எச்.எம்.முக்கு 'பளார்' கொடுத்த ஓவிய ஆசிரியர்!
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பணி நேரத்தின்போது வகுப்பறையில் உட்கார்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த ஓவிய ஆசிரியரை தலைமை ஆசிரியர் கண்டித்தார். இதனால் கோபமடைந்த ஓவிய ஆசிரியர், தலைமை ஆசிரியரை பளார் என அறைந்து விட்டார்.
ராசிபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் சந்திரசேகரன். 56 வயதாகும் இவர் இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெறவுள்ளார். இதே பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருப்பவர் சீனிவாசன். இவருக்கு 45 வயதாகிறது.
நேற்று இவர் வகுப்பறையில் செல்போனில் பேசியபடி இருந்துள்ளார். அப்போது ரவுண்ட்ஸ் வந்த சந்திரசேகரன், வகுப்பு நேரத்தில் ஓவிய ஆசிரியர் செல்போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து கோபமடைந்தார்.
வகுப்பு நேரத்தில் செல்போனில் பேசக் கூடாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த சீனிவாசன், திடீரென தலைமை ஆசிரியரை கன்னத்தில் பளார் என அடித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தலைமை ஆசிரியர் ராசிபுரம் போலீஸில் புகார் கொடுத்தார். மேலும் மாவட்ட கல்வித்துறை அலுவலருக்கும் தகவல் போனது.