கன்னியாகுமரி கொலையாளிகள் மூவரின் மரண தண்டனையை ரத்து செய்தார் குடியரசுத் தலைவர்
சென்னை: நீதிமன்றத்துக்குள் கொலை செய்த வழக்கில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர்கள் ராதாகிருஷ்ணன், செல்வம், ஷேக் மீரான். செல்வத்துக்கும் அதே நாகர்கோவிலைச் சேர்ந்த அய்யாவு என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் 1994-ம் ஆண்டு வழக்கு ஒன்றில் செல்வத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் அய்யாவு சாட்சியம் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது செல்வத்துடன் ராதாகிருஷ்ணன், ஷேக் மீரான் ஆகியோர் இணைந்து நீதிமன்றத்துக்குள் உள்ளே சென்று மாஜிஸ்திரேட் முன்னிலையில் அய்யாவுவை போட்டுத் தள்ளினர். இந்த வழக்கில் மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதிமன்றமும் உறுதி செய்தன.
இதைத் தொடர்ந்து மூவரும் தங்களது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு குடியரசுத் தலைவருக்கு கடந்த 1999-ம் ஆண்டு கருணை மனு அனுப்பினர். இந்த கருணை மனுக்களை பரிசீலித்த குடியரசுத் தலைவர், மூவரின் மரண தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இத்தகவல் மூன்று கைதிகளுக்கும் தெரிவிக்கப்பட்டது. மூவரும் அளவில்லா மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications