பேசியபடி 15 பவுன் நகை போடாததால் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை வீட்டார்
சென்னை: பேசியபடி 15 பவுன் நகை போடாததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் ரயில்வே காலனியைச் சேர்ந்தவர் உமாபதி. ரயில்வே ஊழியர். அவரது மகள் கீர்த்திகா. அவருக்கும் பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் வேலூரைச் சேர்ந்த பிரேம்நாத் என்பவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. வரதட்சணையாக 15 பவுன் நகையும், மாப்பிள்ளைக்கு பைக்கும் வாங்கிக் கொடுக்குமாறு மாப்பிள்ளை வீட்டார் கேட்டனர்.
அதற்கு உமாபதி சம்மதித்தார். கடனை வாங்கியாவது வரதட்சணையைக் கொடுத்துவிடுவது என்று அவர் முடிவு செய்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து திருமணம் நடக்கட்டும், அதன் பிறகு 2 மாதம் கழித்து கேட்டபடி 15 பவுன் நகை போடுகிறோம் என்றனர். ஆனால் மாப்பிள்ளை வீட்டார் அதை ஏற்க மறுத்தனர். பின்னர் ஒருவழியாக சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு ஒப்பக் கொண்டனர்.
இன்று காலை வில்லிவாக்கத்தில் உள்ள ராஜ ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் கீர்த்திகா-பிரேம்நாத் திருமணம் நடப்பதாக இருந்தது. முன்னதாக நேற்றிரவு வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மாப்பிள்ளை வீட்டார் பிரேம்நாத்துடன் மண்டபத்திற்கு வந்தனர். வந்ததில் இருந்து பூ அலங்காரம் சரியில்லை, எங்களை வரவேற்க ஆட்கள் இல்லை என்று குறைபாடிக் கொண்டிருந்தனர். இதனால் 2 வீட்டாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திருமணத்திற்கு பிறகு தனது வீட்டாருடன் தொடர்பு வைக்க மாட்டேன் என்று எழுத்துப்பூர்வமாகக் கொடுக்குமாறு கீர்த்திகாவிடம் மாப்பிள்ளை வீட்டார் தெரிவித்தனர்.
இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் திருமணம் நின்றது. இது குறித்து உமாபதி போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாப்பிள்ளை வீட்டாரிடம் கேட்டதற்கு, நகைக்காக ஒன்றும் திருமணத்தை நிறுத்தவில்லை. பெண் வீட்டாரின் செயலால் தான் திருமணம் நின்றது என்றார்கள்.












Click it and Unblock the Notifications