சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என தொடரப்பட்ட வழக்கில் ப.சிதம்பரம் பதில் மனுத் தாக்கல்

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரமும் அதிமுக சார்பில் ராஜகண்ணப்பனும் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிகை முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது ப.சிதம்பரம் தோல்வியடைந்ததாகவே கருதப்பட்டு வந்தது. ஆனால் கடைசியில் ப.சிதம்பரம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ப.சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ராஜகண்ணப்பன், வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ப.சிதம்பரம் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராஜகண்ணப்பனின் மனுவில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதால், அவரது மனுவை தேர்தல் வழக்காக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று அந்த மனுவில் ப.சிதம்பரம் கூறியிருந்தார். ஆனால் ப.சிதம்பரம் குறிப்பிடும் குறைபாடுகள் சரிசெய்யக் கூடியவை என்பதால் அவரது கோரிக்கையை நிராகரிப்பதாக நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. பணம் பட்டுவாடா செய்வதற்காக எனது மகன் கார்த்தி சிதம்பரம் மற்றும் சிலரை நியமித்திருந்தேன் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. எனது தேர்தல் முகவராகவும் கார்த்தியை நான் நியமிக்கவில்லை. அன்பழகன் என்பவரை கார்த்தி கட்டையால் தாக்கி காயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டும் அடிப்படை ஆதாரமற்றது. எனது காரில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை தாசில்தார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கைப்பற்றினர் என்ற குற்றச்சாட்டும் பொய்யானது.சுய உதவிக்குழு மூலம் பணம் பட்டுவாடா செய்ததாக என் மீது பழி சுமத்துவதும் அடிப்படை ஆதாரமற்றது. எனவே ராஜகண்ணப்பனின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஜூலை 20-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications