நித்தியானந்தா தொடர்பான மேலும் சில விஷயங்களை வெளியிடப் போகிறேன்... லெனின் கருப்பன்

நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார் லெனின் கருப்பன். அப்போது அவர் கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு நித்தியானந்தா தொடர்பான வீடியோவை நான் வெளியிட்டது முதல், இதுவரை நித்தியானந்தா தரப்பில் இருந்து என் மீது 12 பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. இதில் சென்னை வழக்கில் கடந்த மார்ச் மாதம் சரண் அடைந்து தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளேன்.
நான் வெளியிட்ட வீடியோ உண்மையானது என்று, கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் உள்ள லேப்பில் பரிசோதனை செய்து தனது எப்.எஸ்.எல். ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளனர். மேலும் அமெரிக்காவில் உள்ள மிலிட்டரி லேப்பில் செய்யப்பட்ட பரிசோதனையிலும், அந்த வீடியோவில் மார்பிங் செய்யப்படவில்லை என்று சான்று அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை வழக்கில், ஜாமீனில் வெளியே வர தாமதமானதற்கு, நித்தியானந்தா, ரஞ்சிதா மற்றும் அவர்களின் குண்டர்களால் எனக்கிருந்த கொலை மிரட்டலே காரணம். இது தொடர்பாக சிறை நிர்வாகம் மூலமாகவே தமிழக டி.ஜி.பி., கமிஷனர், கர்நாடக டிஜிபி, சிபிசிஐடி போலீசாருக்கு புகார் அளித்துள்ளேன்.
நித்தியானந்தாவுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக கர்நாடக சிபிசிஐடி தரப்பில் 8 முறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை. தற்போது கர்நாடக மாநிலம் ராம்நகர் கோர்ட்டில் இருந்து வந்த சம்மனில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு அடுத்தவாரம் மருத்துவ பரிசோதனை நடைபெற உள்ளது.
நித்தியானந்தாவின் முகத்திரையை கிழித்ததால் என்மீது 12 வழக்குகள் போடப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வழக்குகளை சந்தித்து வருகிறேன்.
நித்தியானந்தா மீது நான் போட்ட வழக்குகள் பொய் என்று கூறுகிறார். நான், அவருக்கு சவால் விடுகிறேன். உண்மை கண்டறியும் சோதனைக்கு வர நான் தயாராக உள்ளேன். அவர் வருவாரா?.
சென்னையில் என் மீது தொடரப்பட்ட, பணம் கேட்டு மிரட்டியதாக கூறும் வழக்கில், குற்றத்தை நான் ஒப்புக்கொண்டதாக நித்தியானந்தா கூறியதாக கேள்விப்பட்டேன். அது பொய்யான தகவல், இதனை நான் கோர்ட்டிலும் பதிவு செய்துள்ளேன். இது தொடர்பாகவும், நித்தியானந்தா தொடர்பாக மேலும் சில முக்கிய விவரங்களையும் அடுத்த வாரம் வெளியிடுவேன். கோர்ட்டில் வழக்கு இருப்பதால், தற்போது அது சம்பந்தமாக எதுவும் கூறமுடியாது.
நித்தியானந்தா தனக்குள்ள சொத்துக்களை குறைவாக கூறியிருக்கிறார். அவருக்கு தனியார் வங்கி ஒன்றில் சொந்த வங்கி கணக்கில் ரூ.32 கோடி வரை பணம் இருந்தது. மேலும் நித்தியானந்தா இம்போர்ட் அண்ட் எக்ஸ்போர்ட் என்ற பெயரில் கடவுள் சிலைகள், புத்தகம் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பிடதி ஆசிரமம் 22 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில் 2 ஏக்கருக்கு மட்டுமே அரசாங்க ரீதியில் பதிவு செய்தது. மற்றவை விவசாய நிலங்கள் ஆகும். அங்குள்ள கட்டிடங்களுக்கும் அரசு அங்கீகாரம் இல்லை. நித்தியானந்தா மீது உடனடியாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நித்தியானந்தாவுக்கு அனைவரையும் மெஸ்மரிசம் செய்யும் கலை நன்றாகவே தெரியும். அதற்கு பலியானவர்தான் ஆதீனம். ஆதீனம் விரும்பினால், முழுமையான ஆதாரத்தோடு, நித்தியானந்தா பற்றி அவருடன் பேச நான் தயார்.
நித்தியானந்தாவுடன் 4 வருடங்கள் இருந்துள்ளேன். அவரால் பலர், குறிப்பாக பெண்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது தெரிந்ததும்தான், அவரை நான் எதிர்க்க தொடங்கினேன். அவர் சம்பந்தப்பட்ட வீடியோ அடங்கிய மெமரி கார்ட்டில் இருந்து 54 வீடியோக்கள் அழிக்கப்பட்டிருப்பதாக கர்நாடக சி.பி.சி.ஐ.டி. அளித்த ரிப்போர்ட்டில் கூறப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ரஞ்சிதா தவிர மேலும் 2 பெண்களும் இருந்தனர்.
நித்தியானந்தாவால் குறைந்தது 30 பெண்களும், 10 ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார் லெனின் கருப்பன்.












Click it and Unblock the Notifications