திமுகவினருக்கு பிரச்சினையில்லை... மூன்றில் ஒரு பங்கு சிறைகள் காலியாக இருக்கிறதாம்!
தமிழகத்தில் சிறிதும், பெரிதுமாக மொத்தம் 134 சிறைச்சாலைகள் உள்ளன. இங்கு மொத்தம் 21,900 பேரை அடைக்கலாம். சனிக்கிழமை நிலவரப்படி 13,970 கைதிகளே உள்ளனர். சதவீதப்படி பார்த்தால் இது மொத்தத்தில் 63.78 சதவீதமாகும்.
இவர்களில் 5000 பேர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். 5773 பேர் ரிமாண்ட் கைதிகள். 1930 பேர் விசாரணைக் கைதிகள்.
கைதிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கு என்ன என்பது குறித்து ஒரு மூத்த வக்கீல் கூறுகையில், பல மாவட்டங்களில் கைது வாரண்ட்கள் ஏராளமான அளவில் நிலுவையிலேயே உள்ளன. இவர்களைக் கைது செய்து கொண்டு வர வேண்டியது காவல்துறையின் கடமையாகும். பல ஆயிரக்கணக்கான கைது வாரண்ட்கள் பல காலமாக நிலுவையில் உள்ளன. அவை அனைத்தும் ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டால், தற்போது உள்ள சிறைகளில் நிற்கக் கூட இடம் இருக்காது என்றார்.
தமிழகத்தில்தான் இப்படி சிறைச்சாலைகள் காற்று வாங்கிக் கொண்டுள்ளன. அதேசமயம், பிற மாநிலங்களில் பஸ்களில் புட்போர்டில் போவது போல உள்ளதாம். ஆந்திராவில் அனுமதிக்கப்பட்ட அளவான 11,792 கைதிகளுக்குப் பதிலாக 13,682 பேரை அடைத்து வைத்துள்ளனராம். கேரளாவில் மொத்தம் 4692 பேருக்குப் பதிலாக 6343 பேர் அடைபட்டுள்ளனர். கர்நாடகத்தில் 8830 பேரைத்தான் அடைக்க முடியும். ஆனால் அங்கு 11,425 பேர் சிறையில் உள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலம்தான் இருப்பதிலேயே மோசம். அங்கு சிறைச்சாலைகளில் அனுமதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 5714 மட்டுமே. ஆனால் 17,335 பேரை போட்டு அடைத்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில்தான் பெருமளவில் விடுதலை செய்யப்பட்டதாக கூறுகிறார்கள். கடந்த 2006 முதல் 2008ம் ஆண்டு வரை 1500 கைதிகளை திமுக அரசு விடுவித்துள்ளதாம். விடுவிக்கப்பட்ட அத்தனை பேரும் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் ஆவர்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 500 ஜாமீன் மனுக்கள் வரை தாக்கலாகிறது. புழல்சிறையில் வாரந்தோறும் 300 முதல் 350 பேர் ஜாமீனில் விடுவிக்கப்படுகிறார்கள்.
இந்த ஆண்டு திருச்சி சிறப்பு சப் ஜெயில், மேட்டுப்பாளையம் சப்ஜெயில், செய்யார் மற்றும் பல்லடம் சப்ஜெயில் ஆகியவை கைதிகள் இல்லாத காரணத்தால் இந்த ஆண்டு மூடப்பட்டு விட்டன. இதில் திருச்சி, மேட்டுப்பாளையம் சப்ஜெயில்கள் பெண்களுக்கானவை.
சிறையில் கைதிகள் இல்லாதது சந்தோஷமானதுதான் என்றாலும் குற்றச் செயல்கள் குறைந்து விட்டதாக இதைக் கருத முடியாது என்கிறார் ஒரு வழக்கறிஞர்.
எப்படியோ, ஜூலை 4ம் தேதி தமிழகத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தப் போகும் திமுகவுக்கு பிரச்சினையில்லை, சிறைகள் காற்று வாங்கிக் கொண்டிருப்பதால் அத்தனை பேருக்கும் உள்ளே தாராளமாக இடம் கிடைக்கும் என்று நம்பலாம்.