அழகிரி பத்திரிக்கை எடிட்டருக்கு விருது கொடுத்த அதிமுக அமைச்சர்!!!
திருச்சி: திருச்சி அதிமுகவினர் குய்யோ முறையோ என்று குமுறிக் கொண்டுள்ளனர். இருக்காதா பின்னே, மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பெயரில் நடத்தப்பட்டு வரும் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியருக்கு அதிமுக அமைச்சர்கள் விருது, நற்சான்றிதழ் கொடுத்துப் பாராட்டினால் கோபாம் வராதா, என்ன...
'குற்றம்' ...நடந்தது என்ன...?
கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று, திருச்சியில், 2011ம் ஆண்டுக்கான சிறந்த தமிழறிஞர்களுக்கு விருது வழங்கும் விழா மற்றும் சித்திரை கலை விழா நடந்தது.
இந்த விழாவில், ஜெருசலேம் என்ற நூலும் விருது பெற தகுதி பெற்றிருந்தது. அதன் ஆசிரியர் மானோஸ். அவருக்கு அமைச்சர் என்.ஆர்.சிவபதி விருதும், நற்சான்றிதழும் வழங்கினார். விழாவில் திருச்சி அதிமுக எம்.பி. குமார், எம்.எல்.ஏக்கள் பரஞ்சோதி, மனோகரன், கலெக்டர் ஜெயஸ்ரீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதிமுகவினர் அதிர்ச்சி ... காரணம் என்ன...?
மேட்டர் என்னவென்றால், இந்த மானோஸ் வேறு யாருமல்ல, கலைஞரின் மு.க.அழகிரி என்ற பெயரில் நடத்தப்பட்டு வரும் மாத இதழின் எடிட்டர் ஆவார்.
எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் பெயரில், அதுவும் அம்மாவுக்கு கடும் எரிச்சலைக் கொடுக்கக்கூடிய ஒருவரின் பெயரில்நடத்தப்பட்டு வரும் பத்திரிக்கை ஆசிரியருக்குப் போய் விருது கொடுத்துக் கெளரவித்துள்ளார்களே என்று அதிமுகவினர் பொங்கிக் கொண்டிருக்கின்றனராம்.
அம்பலமானது எப்படி...?
இந்த விவகாரம் அம்பலமானதும் கூட கலைஞரின் மு.க.அழகிரி பத்திரிக்கை ஊழியர்களால்தான். அவர்கள்தான் தங்களது எடிட்டருக்கு விருது கொடுத்துக் கெளரவித்ததற்கு நன்றி தெரிவித்து திருச்சியில் ஒரு இடம் விடாமல் போஸ்டர் ஒட்டி அமர்க்களப்படுத்தினர். இதைப் பார்த்த பிறகுதான் அதிமுகவினர் கடுப்பாகி விட்டனராம்.
'அம்மா' எடுக்கப் போகும் ஆக்ஷன் என்னவோ...?
இப்போது மானோஸுக்கு விருது கொடுத்த அமைச்சர் சிவபதியும், விழாவில் கலந்து கொண்ட அதிமுக எம்.பி. குமார், எம்.எல்.ஏக்கள் ஆகியோரும் பெரும் டென்ஷனில் உள்ளனராம்.
இந்த விவகாரத்தில் அம்மா என்ன செய்யப் போகிறாரோ என்று பயந்து போய்க் கிடக்கிறார்களாம்.
செம காமெடிதான்...