மின் கம்பத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த மின் ஊழியர் ...விழுப்புரத்தில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி: விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மின்சாரப் பழுது நீக்குவதற்காக மின்கம்பத்தில் ஏறிய மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்து தீப்பிடித்து அவர் எரிந்தார். நீண்ட நேரம் தீப்பிடித்து எரிந்தபடி மின்கம்பத்தின் உச்சியில் சிக்கியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வருகிறார்.
கள்ளக்குறிச்சியில் உள்ள மின்கம்பத்தில் பழுது ஏற்பட்டதால் அதைப் பழுது பார்ப்பதற்காக ராமலிங்கம் என்ற மின்வாரிய ஊழியர் அங்கு வந்தார். மின்கம்பத்தில் ஏறிய அவர் மின்பழுதை சரி செய்து கொண்டிருந்தபோது திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால் அவரது உடலில் தீப்பிடித்துக் கொண்டது.
இடுப்பு, வயிறு, கால் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனால் அவர் மயங்கிய நிலைக்குப் போய் விட்டார். இருப்பினும் தீயின் தாக்கத்தால் அவர் அலறித் துடித்தார். எழுந்திருக்கவும் முடியாத அளவுக்கு மின்சாரத் தாக்கம் இருந்ததால் அவர் பெரும் வலியுடனும், தவிப்புடனும் அலறினார்.
நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்கம்பத்தின் உச்சியில் மின்வாரிய ஊழியர் தீப்பிடித்து எரிந்த நிலையில் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.












Click it and Unblock the Notifications