டி.ஜி.பி. ராமானுஜத்திற்கும் பதவி நீட்டிப்பு வழங்குவாரா ஜெயலலிதா?
சென்னை: டி.ஜி.பி. ராமானுஜத்திற்கு தமிழக அரசு பதவி நீட்டிப்பு வழங்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
1952 ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிறந்த ராமானுஜம் திருச்சி, புனித ஜோசப் கல்லூரியில் எம்.எஸ்சி. படிப்பை முடித்தார். 1978 ம் ஆண்டு ஐ.பி.எஸ்.அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டார். கூடுதல் எஸ்.பி.யாக திருச்சி ரூரல், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் பணியாற்றியுள்ளார். எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மேற்கு, விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றினார்.
மேலும், நுண்ணறிவுப் பிரிவில் எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி. மற்றும் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றிய அவர், போலீஸ் பயிற்சிப் பிரிவு, மாநில குற்ற ஆவணக் காப்பகம், விஜிலென்ஸ் மற்றும் ஊழல் ஒழிப்புத் துறையிலும் கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றினார். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த ராமானுஜத்திற்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு தமிழக சட்டம்-ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
தமிழக டி.ஜி.பி.யாக உள்ள ராமானுஜம் நேர்மைக்கு பெயர் போனவர். எந்த அரசியல் சார்பும் இன்றி செயல்படக் கூடியவர். இதனால் அவர் மீது முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு உளவுப்பிரிவு தலைவராக டி.ஜி.பி. ராமானுஜம் நியமிக்கப்பட்டார். கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் பதவியையும் கவனிப்பார் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் டி.ஜ.பி.ராமானுஜம் ஓய்வு பெற உள்ளராம். அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது இத்துடன் தமிழக அரசு கழித்துவிடுமா என தமிழக காவல் துறை வட்டாரங்களில் பட்டிமன்றம் நடைபெற்று வருகின்றது.
இது குறித்து அதிமுக தரப்பில் விசாரித்த போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நம்பகமான அதிகாரிகளில் மிக முக்கியமானவர் டி.ஜி.பி. ராமானுஜம். அவர் ஓய்வு பெறுவது காலத்தின் கட்டாயம். ஆனால் கடந்த காலங்களில் தமிழக சட்டசபை செயலாளர் ஜமாலுஜீன் போன்றவர்களுக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது போலவே ராமானுஜத்திற்கும் முதல்வர் ஜெயலலிதா பதவி நீட்டிப்பு வழங்குவார் என்று அடித்து கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications