பாகிஸ்தானில் மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்படலாம்: முஷாரப் ஆரூடம்
லண்டன்: பாகிஸ்தானில் மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அதிபர் பதவியில் இருந்து விலகிய பிறகு பர்வேஸ் முஷாரப் நாட்டை விட்டு வெளியேறி இங்கிலாந்து மற்றும் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில் அமெரிக்காவின் கொலரடோவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது,
பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழ்நிலை சரியில்லை. நாட்டைக் காக்க மக்கள் ராணுவத்திடம் தான் ஓடுகின்றனர். பாகிஸ்தானில் மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று அஞ்சுகிறேன் என்றார்.
பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்த முஷரப்புக்கு அந்நாட்டு ராணுவத்தினருடன் இன்னும் தொடர்பு உள்ளது. அப்படி இருக்கையில் அவர் மீண்டும் ஒரு ராணுவப் புரட்சி ஏற்படலாம் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியல் வாழ்க்கையில் இருந்தே விலக வேண்டும் என்று லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முஷாரப் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாடு திரும்புவதாக அறிவித்தார். ஆனால் பாகிஸ்தான் செல்லவில்லை. பின்னர் மார்ச் மாதம் நாடு திரும்பப் போவதாகக் கூறினார். மார்ச் மாதம் முடிந்து ஜூலையும் வந்துவிட்டது ஆனால் முஷாரப் இன்னும் நாடு திரும்பவில்லை.












Click it and Unblock the Notifications