'தளபதியை' வெளியே விடுங்க, இல்லாட்டி எங்களையும் உள்ளே போடுங்க..!
சென்னை: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அடைக்கப்பட்டிருந்த கல்யாண மண்டபத்திற்கு வெளியே திடீரென மறியல் போராட்டத்தில் குதித்த முன்னாள் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு ஸ்டாலினை விடுதலை செய்ய வேண்டும், இல்லாவிட்டால் என்னையும் கைது செய்ய வேண்டும் என்று கோரியதால் சலசலப்பு ஏற்பட்டது.
சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இன்று காலை கைது செய்யப்பட்டனர். அவர்களை கொளத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர் போலீஸார்.
அப்போது அந்தத் திருமண மண்டபத்திற்கு வந்த முன்னாள் புரசைவாக்கம் திமுக எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஸ்டாலினை விடுதலை செய்யுங்கள், இல்லாவிட்டால் எங்களையும் கைது செய்யுங்கள் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. திமுகவினரும் குழப்பமடைந்தனர். காரணம், வி.எஸ்.பாபு சமீப காலமாக திமுகவில் ஒட்டுதலோடு செயல்படாமல் அமைதியாக இருப்பவர். ஸ்டாலின் ஆதரவாளராக திகழ்ந்த இவர் கட்சிப் பணிகளில் கலந்து கொண்டு பல மாதங்களாகி விட்டது. இந்த நிலையில் திடீரென பாபு ஸ்டாலினுக்காக ஒரு தனிப் போராட்டத்தில் குதித்ததால் திமுகவினருக்கே ஆச்சரியமாக இருந்தது.












Click it and Unblock the Notifications