உடல் நலனையும் பொருபடுத்தாமல் போராட்டத்தில் பங்கேற்று கைதானார் மு.க.ஸ்டாலின்!

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.
இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.
காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.
காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.
முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,
மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.
கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).
அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).
போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.
வட சென்னையில் சேகர் பாபு உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது
இதேபோல வட சென்னைப் பகுதியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ பி.கே.சேகர்பாபுவும் ஒருவர். இவரை போராட்டத்திற்கு வருவதற்கு முன்பே போலீஸார் மடக்கிக் கைது செய்து கொண்டு சென்றனர்.
இதேபோல போராட்டத்திற்கு வந்த அத்தனை பேரையும் போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications