மின் விபத்துகளை தவிர்க்க மின் வாரிய அதிகாரி அளிக்கும் சில முக்கிய 'டிப்ஸ்'
திருச்சி: மின்சாரம் தாக்கி உயிரிழப்போர் மற்றும் காயமடையும் நபர்களின் எண்ணிக்கை குறைக்க, மின் விபத்துகளை தவிர்க்க தேவையான சில முக்கிய வழிமுறைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இறப்போரின் எண்ணிக்கை ஆண்டுத்தோறும் அதிகரித்து வருகிறது. மேலும் பலரும் மின்சாரம் தாக்கி காயமடைந்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில், கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகளை மின்சார வாரிய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
சாலைகளில் மின் கம்பி அறுந்து கிடந்தால் பொது மக்கள் அதன் அருகில் செல்லவோ, அதனை தொடவோ கூடாது. அது குறித்து உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
மின்சார வாரிய பணியாளர்களை தவிர வேறு யாரும் மின் தடையை சரி செய்ய மின் கம்பத்திலோ, மின் மாற்றியிலோ ஏறி பணியில் ஈடுபட கூடாது. பொது மக்கள் தங்களது சொந்த இடங்களில் பணிகள் மேற்கொள்ளும் போது, அருகில் செல்லும் மின்பாதைகள், மின்கம்பிகளை தொடவோ, அருகில் செல்லவோ கூடாது. முடிந்த வரை மின் கம்பிகளின் அருகில் வேலை செய்வதை தவிர்க்க வேண்டும்.
சுமை ஏற்றி செல்லும் டிராக்டர், லாரிகள் சாலையில் செல்லும் போது அருகில் உள்ள மின்பாதை, கம்பிகளை உரசாமல் கவனமாக செல்ல வேண்டும். பொதுமக்கள் மின்பாதைக்கு அருகில் வீடு மற்றும் கட்டிடம் கட்டும்போது மின் பாதையில் இருந்து போதிய இடைவெளி விட்டு கட்ட வேண்டும்.
திருவிழா காலங்களில், தேரோட்ட நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தால் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து உரிய அனுமதி பெற வேண்டும். பொதுமக்கள் தங்களது சொந்த இடங்களில் மின்சாரம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் போது மின் இணைப்பில் மின்நிறுத்தம் செய்து விட்டு பணியை கவனமாக செய்ய வேண்டும் என்று மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications