9 மணிக்கு முன்பே போய் விடுமாறு பொதுமக்களைக் கேட்டுக் கொண்ட போலீஸ்!
சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் எதிரொலியாக இன்று காலை 9 மணிக்குள் சென்னை சைதாப்பேட்டை, போர் நினைவுச் சின்னம், எழிலகம், டிஎம்எஸ் வளாகம், பனகல் மாளிகை ஆகிய பகுதிகள் வழியாகச் செல்வோர் போய் விடுமாறு காவல்துறை நேற்று கேட்டுக் கொண்டதால் இன்றுகாலை அந்தப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திமுகவினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்துகின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்துள்ளனர்.
சென்னையில் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேற்று காவல்துறையினர் விடுத்திருந்த அறிக்கையில்,
சென்னையில் 22 இடங்களில் தி.மு.கவினரைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது நடக்கும். இந்தப் போராட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொள்ளவில்லை. அவரது மகனும் திமுக பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தனது தொகுதியான கொளத்தூரில் கலந்து கொள்கிறார்.
சிபிஐ கோர்ட்டின் முன்அனுமதியுடன் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.
இதைத்தொடர்ந்து, சைதை பனகல் மாளிகை, டி.எம்.எஸ். வளாகம், எழிலகம் மற்றும் போர் நினைவுச்சின்னம் வழியாக அலுவலகம் செல்வோர் காலை 9 மணிக்கு முன்னதாகச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.
இதனால் அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்குச் செல்வோர் இன்று காலை சீக்கிரமே கிளம்பிச் சென்றதால் இந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் கூடுதலாக இருந்தது.












Click it and Unblock the Notifications