மமதா பானர்ஜி நிச்சயம் எனக்கு ஆதரவளிப்பார்: பிரணாப் முகர்ஜி நம்பிக்கை
திருவனந்தபுரம்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தனக்கு ஆதரவு அளிப்பார் என்று தான் நம்புவதாக பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி தனக்கு ஆதரவு திரட்டுவதற்காக நேற்று கேரளா வந்தார். திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் ஹோட்டல் ஒன்றில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தி்த்து பேசினார். எதிர்கட்சி தலைவர் அச்சுதானந்தன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களான கொடியேறி பாலகிருஷ்ணன், பேபி ஆகியோரை சந்தி்த்து ஆதரவு கேட்டார். அப்போது மத்திய அமைச்சர்கள் ஏ.கே. அந்தோணி, வயலார் ரவி ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் பிரணாப் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
குடியரசுத் தலைவர் பதவி அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். இதனால் தான் அரசியல் ரீதியாக என்னை எதிர்த்து வரும் சிவசேனா, பார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை எனக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எனக்கு ஆதரவு அளிப்பார் என்ற நம்பி்க்கை உள்ளது என்றார்.