தாம்பரம் விமான தளத்தை முற்றுகையிடுவோம்... வைகோ எச்சரிக்கை
சென்னை: ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை விமானப்படையினருக்கு தமிழகத்தில் அதுவும் தலைநகர் சென்னையில் பயிற்சி அளிப்பதை ஏற்கவே முடியாது. இது மன்னிக்க முடியாத துரோகம். இதை எதிர்த்து தாம்பரம் விமான தளத்திற்கு எதிரே மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
ஈழத்தமிழர்களை படுகொலை செய்த சிங்கள அரசின் விமானப்படையினருக்கு, இந்திய அரசு ரேடார்களும், ஆயுதங்களும் கொடுத்து பயிற்சியும் அளித்தது. வெந்த புண்ணில் சூட்டுக்கோல் திணிப்பதுபோல், தற்போது சிங்கள விமானப் படையினருக்கு தாய்த் தமிழகத்திலேயே சென்னை தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் பயிற்சி கொடுத்து வருகின்ற கொடுமை நடக்கிறது.
இது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும். தாம்பரத்தில் உள்ள சிங்கள விமானப்படையினரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றுவதோடு, இந்தியாவில் வேறு எந்த இடத்திலும் பயிற்சியும் அளிக்கக் கூடாது. அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு எதிரே மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கிறேன் என்று அவர் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications