மதுரை இசைக் கல்லூரியில் சேர வருமாறு கலெக்டர் அன்சுல் மிஸ்ரா அழைப்பு
மதுரை: தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
மதுரையில் பசுமலை தேவசகாயம் மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் தமிழ்நாடு அரசு கலைப்பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு இசைக் கல்லூரியில் சேர்வதற்கு மாணவர்கள் வரவேற்கப்படுகிறார்கள்.
இக்கல்லூரியில் குரல் இசை, வயலின், வீணை, மிருதங்கம், புல்லாங்குழல், நாதசுரம், பரதநாட்டியம் ஆகிய கலைப் பிரிவுகளில் மூன்றாண்டு பட்டயப் படிப்புகளும், ஓராண்டு இசை ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பும் கற்பிக்கப்படுகிறது. இக்கலைப் பிரிவுகளில் சேர்ந்து பயில்வதற்கு 13 வயது நிறைவு பெற்றவராகவும், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இசை ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும், இசைக் கலைமணி பட்டயமும் பெற்றிருக்க வேண்டும்.
கற்க விரும்பும் கலைப் பிரிவில் முன் அனுபவமும், ஆர்வமும் இருப்பின் கல்வி மற்றும் வயது தகுதி தளர்த்தப்படும். மேலும், அரசு மாலை நேர இசைக் கல்லூரி, பெரியார் நிலையம் அருகிலுள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை இயங்கி வருகிறது.
இக்கல்லூரியில் பணிபுரிபவர்கள், இல்லத்தரசிகள் மற்றும் இசை ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் இசையை கற்றுக்கொள்ளலாம். எனவே, இந்த அரிய வாய்ப்பை இசை கற்க ஆர்வமுள்ள அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications