டெசோ மாநாடு ஒத்திவைப்பு .. மேனன் மூலமாக இந்தியாவுக்கு ராஜபக்சே கொடுத்த நெருக்குதல் காரணமா?

விழுப்புரத்தில் ஆகஸ்ட் 5ம் தேதி டெசோ மாநாடு நடைபெறும் என்று திமுக அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டிருந்தன. வரவேற்புக் குழுவும் ஸ்டாலி்ன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அத்தனை ஏற்பாடுகளும் பிரமாண்டமாக நடந்து வந்த நிலையில் திடீரென அதை சில வாரங்களுக்கு ஒத்தி வைத்து விட்டது திமுக. அதாவது மாநாடு நடைபெறுவதாக இருந்த தினத்திலிருந்து சில வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
திமுகவின் இந்த திடீர் முடிவு பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சமீபத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எஸ்.எஸ்.மேனன் கொழும்பு போயிருந்தார். அவர் ஏன் போனார் என்பது வழக்கம் போலவே தெளிவற்ற ஒன்றாகவே இருக்கிறது. ராஜபக்சேவிடம் அவர் உண்மையில் என்ன பேசினார், மேனனிடம் ராஜபக்சே உண்மையில் என்ன சொன்னார் என்பது இவர்கள் இருவருக்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
டெசோ மாநாட்டுக்கு இலங்கைத் தரப்பிலிருந்து குறிப்பாக இலங்கை அமைச்சர்கள், புத்த பிக்குகள் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இலங்கை மண்ணை இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு நாங்கள் ஒருபோதும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம், அதேபோல இந்திய அரசும் நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு வகையான மிரட்டலுடன் அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தனர் பிக்குகள்.
இந்தக் கடிதம் இந்தியாவுக்கு வந்த பிறகுதான் மேனன் கிளம்பிகொழும்புக்குப் போனார். எனவே இந்த விவகாரம் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கவே மேனன் போயிருந்ததாக கருதப்படுகிறது. ராஜபக்சேவை அவர் சந்தித்தபோது, டெசோ மாநாட்டை நிறுத்த வேண்டும் என்று இந்தியாவுக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ ராஜபக்சே எச்சரிக்கை விடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தியா என்னதான் தெற்காசியாவின் வல்லரசு நாடாக இருந்தாலும் இலங்கையிடம் இப்போது சுண்டெலி போல பணிந்துதான் போய்க் கொண்டிருக்கிறது. காரணம், சீனா என்ற மூஞ்சுரு பக்கத்திலேயே தேவுடு காத்துக் கொண்டிருப்பதால். இதைக் காட்டிக் காட்டியே இந்தியாவை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டிருக்கிறது இலங்கை.
எனவே மேனன் மூலமாக இலங்கையிடமிருந்து வந்த மிரட்டல் அல்லது நெருக்கடிக்கு மத்திய அரசு பணிந்திருக்கலாம். திமுக தலைமையிடம் டெசோ மாநாட்டை இப்போதைக்கு ஒத்திவைத்து விட்டு பின்னர் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதற்கேற்பவே இப்போது மாநாட்டை ஒத்திவைப்பதாக கருணாநிதி அறிவித்துள்ளார். அதேசமயம், தொண்டர்கள் மனம் உடைந்து போய் விடக் கூடாது என்பதற்காக சென்னையில் மாநாடு நடைபெறும், சில வாரங்கள் கழித்து என்று சின்னதாக ஒரு பிட்டைப் போட்டு வைத்துள்ளார்.
உண்மை என்னவோ தெரியவில்லை...!












Click it and Unblock the Notifications