'புலிகள்'... சமாளிக்க அதிகாரிகளுக்குப் பயிற்சி தரும் இலங்கை அரசு!
கொழும்பு: விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டதாக கூறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசை இன்னும் புலிகள் பயம் விடவில்லை. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல எங்கு பார்த்தாலும் புலிகளாக இருப்பது போலவே தோன்றுகிறது. மேலும் வெளிநாடுளில் மிக வலுவாக இருக்கும் ஈழத் தமிழர் கட்டமைப்பை, உடைத்து தகர்க்க தனது அதிகாரிகளுக்கு சிறப்பு் பயிற்சிகளையும் அளித்து வருகிறதாம் சிங்கள அரசு.
விடாது கருப்பு என்பது போல விடுதலைப் புலிகள் குறித்த பயத்திலிருந்து விலகாமல் தொடர்ந்து பீதியுடனேயே இருக்கிறது இலங்கை அரசு. இதற்குக் காரணமும் இருக்கிறது. லண்டன் பக்கம் ராஜபக்சேவால் போக முடியவில்லை, போய் ஒரு கூட்டத்திலும் பேச முடியவில்லை. காரணம், ஈழத் தமிழர்களின் அமைதிப் படையெடுப்பு. இவர்களுக்கு இலங்கை அரசு குத்தியிருக்கும் முத்திரை விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள்.
இதேபோல ஒவ்வொரு மேலை நாட்டிலும் ஈழத் தமிழர்கள் ஒருங்கிணைந்து இலங்கை அரசுக்கு எதிராக முழு வீச்சில் இயங்கி வருகின்றனர். முடிந்தவரை இலங்கையின் பெயரை டேமேஜ் செய்து வருகின்றனர். ஒரு அரசாக, ஒரு நாடாக, இதை சமாளிக்க முடியாமல் திணறித் தவித்துக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.
இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள ஈழத் தமிழர் கட்டமைப்பு மேற்கொள்ளும் எதிர்ப்பு முயற்சிகளை சமாளிக்கும் வகையில் தனது தூதரக அதிகாரிகளுக்கு சிறப்புப் பயிற்சி முகாமை நடத்துகிறதாம் இலங்கை அரசு.
இந்த இரண்டு நாள் பயிற்சி முகாம் சுற்றுலா தலமான தியாதாலாவாவில் இந்த வார இறுதியில் நடைபெறும். இதில் மூத்த அமைச்சர்களும், வெளியுறவுத் துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்பார்கள். இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான அன்னிய நேரடி முதலீடுகளைக் கொண்டு வர நேர்மறையான முயற்சிகளை எடுப்பது குறித்தும் தூதரக அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சர்வதேச அளவில்,மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் உலக அரங்கில் இலங்கை பலத்த பின்னடைவை சந்தித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன், இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து இலங்கையின் வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் பலர் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களான இந்த அதிகாரிகள், நாட்டுக்கு எதிரான பிரசாரங்களை முறியடிப்பதில் போதிய அக்கறை காட்டவில்லை என புகார் கூறப்படுகிறது.
குறிப்பாக விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் அதிகமுள்ள மேற்கு நாடுகளில், இலங்கை தூதரக அதிகாரிகளின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. அந்நாடுகளில் உள்ள ஆட்சியாளர்களிடம் புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கைக்கு எதிரான பிரசாரத்தை திறம்பட மேற்கொள்கின்றனர். அதை முறியடிக்க தூதரக அதிகாரிகள் எதையும் செய்யவில்லை என்று இலங்கையில் உள்ள அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
எனவே, சுற்றுலா வளர்ச்சி, அன்னிய முதலீடு, நாட்டுக்கு எதிரான பிரசாரத்தை முறியடித்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பயிற்சி முகாம் நடைபெறுவதாக இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இப்பயிற்சி முகாமில் பங்கேற்கும் தூதரக அதிகாரிகள், கிழக்கு மாகாணத்தில் அரசு மேற்கொண்டுள்ள வளர்ச்சிப் பணிகளையும் பார்வையிட உள்ளனர்.
ஒரு இன மக்களின் எழுச்சி எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் ஒரு நாடு திணறுவதை உலகம் இப்போதுதான் பார்க்கிறது.












Click it and Unblock the Notifications