தமிழகத்திற்கு செல்ல முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ராசாவுக்கு 2 நாட்கள் அனுமதி:சிபிஐ தனி கோர்ட்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருப்பவர், முன்னாள் தொலை தொடர்புத்துறை அமைச்சர் ராசா. இந்த வழக்கில் 15 மாதங்களாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராசாவுக்கு, டெல்லி சி.பி.ஐ. தனிக் நீதிமன்றம் கடந்த மே 15ம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
இந்த நிபந்தனைகளில் டெல்லி சி.பி.ஐ. தனி நீதிமன்றத்தின் முன் அனுமதியின்றி ராசா, தமிழகத்திற்கு செல்லக் கூடாது என்பது முக்கியமானது. இந்த நிலையில் தனத சொந்த தொகுதியான நீலகிரியில் 2 நாட்கள் வந்து செல்ல அனுமதி அளிக்க கோரி, சி.பி.ஐ நீதிமன்றத்தில் ராசா மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சைனி, சி.பி.ஐ. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்காததால், ராசாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக சி.பி.ஐ. நீதிமன்ற உத்தரவில் கூறியிருப்பதாவது,
ராசாவின் மனுவிற்கு சி.பி.ஐ. தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாததால், மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது. இன்று (நேற்று) மாலையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு வரை ஆ.ராசா ஏற்கனவே கடந்த ஜுன் மாதம் 6ம் தேதி இந்த நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறி உள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு, தமிழகம் போய் வர அனுமதி வழங்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.