கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைப்பு
கோவை: கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ளது ஆவாரம்பாளையம். அங்கு ஷோபா நகர் மாரியம்மன் கோவில் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40வது வட்ட கிளை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகம் முன்பு வைக்கப்பட்டிருந்த பந்தல், கட்சி பெயர் பலகை மற்றும் பிளக்ஸ் போர்டு ஆகியவற்றிற்கு நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தீ வைத்துவிட்டு தப்பிவிட்டனர்.
தீ பற்றி எரிந்த நிலையில் அந்த வழியாக வந்தவர்களும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்களும் தண்ணீரை ஊற்றி் தீயை அணைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த சிங்காநல்லூர் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் மனோகரன் கட்சி அலுவலகத்திற்கு வந்து பார்வையிட்டார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கடந்தாண்டு அலுவலகத்தில் இருந்த பெயர் பலகையை உடைத்து, கொடிக் கம்பத்தைச் சிலர் சேதப்படுத்தினார்கள். அதே போல தற்போதும் பெயர் பலகை மற்றும் பந்தலுக்கு தீ வைத்துள்ளனர். சட்டவிரோத செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளைப் போலீசார் கண்டறிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் பற்றி சிங்காநல்லூர் போலீசார் கூறுகையில்,
மின் கசிவு காரணமாக கட்சி அலுவலகம் முன்பு இருந்த பந்தலில் தீப்பற்றியுள்ளது. பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருந்தால் தீ பரவி இருக்கும். பாதிப்பும் பெரிதாக இருக்கும். இருந்தாலும் இந்த தீ விபத்தில் சதிச் செயல் உள்ளதா என விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.
கட்சி அலுவலகத்திற்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவத்திற்கு கோவை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவி்த்துள்ளது.












Click it and Unblock the Notifications