காரைக்குடி அருகே ஊராட்சி தலைவரைக் கடத்திய 4 பேர் கைது
காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடியை கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்குடி அருகே உள்ளது சங்கராபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சித் தலைவராக இருப்பவர் மாங்குடி. அவரது அக்கா மகன் சரவணன், புதுக்கோட்டை மாவட்டதில் உள்ள கே.புதுப்பட்டியைச் சேர்ந்த கணபதி (42) என்பவரது மகளைக் கடத்திவிட்டதாகப் புகார் எழுந்தது. இந்த கடத்தலில் மாங்குடிக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ம் தேதி மாங்குடி வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் அவரைக் காரில் கடத்திச் சென்றது. அவர் கடத்தப்பட்டது குறித்து அவரது மனைவி தேவி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கராபுரம் ஊராட்சி தலைவர் மாங்குடியை தேடி வந்தனர்.
கே.புதுப்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து, அடித்து உதைத்துள்ளனர். மேலும் அவரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டி உள்ளது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த இடத்திற்குச் சென்று மாங்குடியை போலீசார் மீட்டு வந்தனர். அவரைக் கடத்திய 9 பேரை போலீசார் வலை வீசித் தேடி வந்தனர்.
இந்நிலையில் கே.புதுப்பட்டியைச் சேர்ந்த கணபதி (42), வெற்றிச் செல்வம் (36), ராமன்(35), பெரியசாமி (45) ஆகியோரை வடக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆத்மநாதன் கைது செய்தார். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.