ஹஜ் பயண கட்டணத்தை வரும் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்-ஹஜ் கமிட்டி துணைத்தலைவர்
சென்னை: ஹஜ் பயணம் செல்லும் பயணிகள் வரும் 31ம் தேதிக்கு பயண கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபாக்கர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து ஆண்டுத்தோறும் முஸ்லிம்கள் ஹஜ் புனித யாத்திரைக்கு சென்று வருகின்றனர். இந்த ஆண்டு ஹஜ் பயணத்திற்காக சவுதி அரேபிய அரசுடன் ஒப்பந்தம் செய்ய இந்திய அரசின் சார்பாக, இந்திய ஹஜ் கமிட்டி துணைத் தலைவர் அபுபக்கர் தலைமையில் நிர்வாக அதிகாரி டாக்டர் ஜாகீர் உசேன், உறுப்பினர் ஜமீல் அகமது ஆகியோர் நேற்று சவுதி அரேபியாவிற்கு சென்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அபுபக்கர் கூறியதாவது,
தமிழகத்தில் இருந்து 3,315 பேர் ஹஜ் பயணம் செய்ய உள்ளனர். ஹஜ் பயணத்திற்கான கட்டணத்தை செலுத்த வரும் 31ம் தேதி கடைசி நாள். தமிழகத்தில் இருந்து ஹஜ் புனித பயணத்திற்கு செல்பவர்களின் கோட்டாவை அதிகரிக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சவுதி அரேபியா அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்காக 2 நாள் பயணமாக செல்கிறோம் என்றார்.
முன்னதாக ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள இந்தாண்டு தமிழகத்தில் இருந்து 12,110 பேர் விண்ணப்பத்து இருந்ததாக அமைச்சர் ஜான் முகமது அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications